முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, March 13, 2015

மாவட்ட அளவிலான செஸ் போட்டி - விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 25

No comments :
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் மார்ச் 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட செஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் வருகிற 29ம் தேதி தேவிபட்டினம் இசிஆர் ரோடு கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது.  இதில் 9, 11,13, 15 மற்றும் 17 வயது பிரிவுகளில் போட்டி நடத்தப்படும்.  போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும். 

போட்டிகளுக்கான நுழைவுப் படிவங்கள் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ராக்லண்ட் மதுரம், சாலமன் ரத்தினசேகரன், பரமக்குடி ஆர்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரோஸ்குமார், ராமேஸ்வரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே திரவிய சிங்கம், சாயல்குடி ரோஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதன்குமார், தேவிபட்டினம் இசிஆர் ரோடு கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் நெடுஞ்செழியன் ஆகியோரிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 25ம் தேதி மாலை 6 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் ராக்லண்ட் மதுரம் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 246 பேர் கைது!!

No comments :
ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 246 பேர் போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அதிகரித்து வரும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்தவும், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறை தடை விதித்திருந்த நிலையில், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பிருந்து வியாழக்கிழமை அக்கட்சியை சேர்ந்தவர்கள் பேரணியாக வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி முற்றுகையிட சென்றனர்.
இந்த போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் (கிழக்கு) எம். சோமு தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் அப்துல்ஜமீல், மாநில வர்த்தக அணி செயலர் ஏ. முகம்மது சரீப் சேட், மாநில பொருளாளர் பி. கார்மேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தை நெருங்கிய போது ராமநாதபுரம் டி.எஸ்.பி. அண்ணாமலை ஆழ்வார் தலைமையிலான போலீஸார் அவர்களை மறித்து 178 பேரை கைது செய்தனர். போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் எஸ். செய்யது இப்ராகிம், மாவட்ட செயலர் எஸ்.அப்பாஸ்அலி ஆலிம், மாவட்ட பொருளாளர் ஏ.அப்துல் வஹாப், நகர் தலைவர் ஜெ.முகம்மது சுல்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி: பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வியாழக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இம்போராட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் முஹமதுஇசாக் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் அஸ்கர்அலி, பொருளாளர் அஹமது சித்திக், செயற்குழு உறுப்பினர் வேந்தை ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் நஸ்ருதீன் சிறப்புரையாற்றினார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக அக்கட்சியைச் சேர்ந்த 68 பேரை போலீஸார் கைது செய்தனர்.

 செய்தி; தினமணி