முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 7, 2016

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற இருவர் மீது வழக்கு!!

No comments :
போலியான ஆவணங்கள் தயாரித்தும் ஆள்மாறாட்டம் செய்தும் பாஸ்போர்ட் பெற்ற இருவர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



ராமநாதபுரம் கொத்தனார் தெருவில் வசித்து வரும் ராமச்சந்திரன் மகன் சண்முகநாதன்(44). இவர் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தனது சகோதரி ராஜேஸ்வரியின் கணவர் ரகுநாதசேதுபதி வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் ராமநாதபுரம் குண்டுக்கரை முருகன் கோயில் தெருவில் வசித்து வரும் சின்னச்சாமியை தனது கணவர் எனக் கூறி ஆள்மாறாட்டம் செய்தும், போலியான ஆவணம் தயாரித்து அதை மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் காண்பித்து ராஜேஸ்வரி மோசடியாக பாஸ்போர்ட் பெற்றுள்ளார். 

இதையடுத்து ராஜேஸ்வரி மற்றும் சின்னச்சாமி ஆகிய இருவர் மீதும் ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பெங்களூர் நாட்கள் – தமிழ் திரை விமர்சனம்!!

No comments :

மலையாளத்தில் நிவின்பாலி, துல்கர் சல்மான், ஃப்கத் ஃபாஸில், நஸ்ரியா, நித்யா மேனன் என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வெளியாகி ஹிட்டடித்த பெங்களூர் டேஸ்படத்தின் ரீ மேக்தான் பெங்களூர் நாட்கள்

கம்பியூட்டர் இன்சினியாரவோணும் நீயிஎன்ற அம்மா சரண்யாவின் ஆசைக்கேற்ப இஞ்சினியராகும் பாபி சிம்ஹா. ரெண்டு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணிக்கலைன்னா உங்க பொண்ணு ஓடிப்போய்டுவாஎன ஜோசியர் சொல்லிவிட, திருமண ஏற்பாடு செய்யும் பெற்றோர் சொல்படி திருமணத்திற்கு தயாராகும் ஸ்ரீதிவ்யா. பிரிந்துவிட்ட அப்பா, அம்மாவால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட, தனக்குப் பிடித்த ரசனையான வாழ்க்கையை வாழும் செல்ஃபி ப்ரியர் - கம் - ரேஸ் பைக் மெக்கானிக் ஆர்யா. மூவரும் கஸின்கள் என்றாலும் டிகிரி தோஸ்துகள், பாபி சிம்ஹாவுக்கு வேலையும், ஸ்ரீதிவ்யாவுக்கு மாப்பிளையும் பெங்களூரிலேயே கிடைத்துவிட ஆர்யா வேறு அங்கிருப்பதால் சேர்ந்து கொட்டமடிக்கலாமே என்ற அவர்களின் சந்தோஷக் கும்மாளத்துடன் ஆரம்பிக்கிறது படம்.

ஸ்ரீதிவ்யாவை மணமுடிக்கும் ராணா, வேலை வேலை என்று அலையும் ரிசர்வ்ட் ஆசாமியாக இருக்க, வருத்தமடைகிறார் அவர். கிராமத்துப் பெயர் கொண்ட, ஆனால் கொஞ்சம் மாடர்னான, அழகான காதலியாக கிடைக்க வேண்டுமென்ற கவலையில் இருக்கும் பாபி சிம்ஹாவிற்கு, லட்டு போல ஏர் ஹோஸ்டஸ் ராய் லட்சுமி கிடைக்கிறார். நான் இப்படித்தான் என ஜாலி லைஃபில் வாழும் ஆர்யாவுக்கோ, ரேடியோ ஜாக்கி, பார்வதியின் குரலே எனர்ஜி பூஸ்டர். ராணா அலுவல் காரணமாக வெளிநாடு போய்விட, இவர்கள் மூவரும்  சந்திப்பதே ஸ்ரீதிவ்யாவுக்கு ரிலாக்ஸாக இருக்கிறது. ராணா இருக்கும்போது வீட்டுக்குச் சென்றாலும், இவர்களைப் பார்த்தாலே சைலன்ஸாகிறார் ராணா. அதுவும் பாபி சிம்ஹா ராணாவை அண்ணா என அழைக்க, ‘என்னடி அண்ணன்கறான்? அப்ப நீ யாரு அம்மு?’என ஸ்ரீதிவ்யாவிடம் கிண்டலடிக்கும் ஆர்யாவைக் கண்டாலே பார்வை மாறுகிறது ராணாவுக்கு.



அடுத்ததாக, அதிர்ச்சி வெர்ஷன்கள். எப்போதும் தன் அறையைப் பூட்டி வைத்திருக்கும் ராணா, ஒருநாள் சாவியை வைத்துவிட்டுச் சென்றுவிட, அந்த அறைக்குள் சென்று பார்க்கும் ஸ்ரீதிவ்யாவிற்கு ஓர் அதிர்ச்சி. தன் ப்ரிய ஆர் ஜே, பார்வதியை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுக்க நினைக்கிற ஆர்யாவிற்கு ஓர் அதிர்ச்சி. சைட்டடித்த ராய் லட்சுமி, பால்கனியில் அமர்ந்து ஹெட் மசாஜ் செய்துவிடுமளவிற்கு க்ளோஸானாலும், பாபி சிம்ஹாவிற்கும் - ராய் லட்சுமி வீட்டில் ஓர் அதிர்ச்சி. 

அந்த அதிர்ச்சிகள் என்ன, மூவரும் அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள், முடிவில் என்ன ஆனது என்பதையெல்லாம்... ஆ. , அஸ்கு புஸ்கு... என்னைக்கு நாங்க கதை சொல்லிருக்கோம்.. இந்தப் பழைய பாட்டு புக்லலாம் போடுவாங்களே.. ஆங்.. அதேதான்.. வெள்ளித்திரையில் காண்க!

படிய வாரிய தலையுடன், தயக்கமாய் ஆரம்பித்து அடுக்குமொழி ஆங்கிலத்தில் இண்டர்வ்யூவில் அசத்தும் பாபிசிம்ஹா நடிப்பில் அசரடிக்கிறார். போடா போடா எனக்கென்னகேரக்டரை கேஷுவலாகவே செய்திருக்கிறார், ஆர்யா. இவர்களிடையே மாட்டிக் கொண்டு ஸ்கோர் செய்யாமல் அல்லது செய்ய முடியாமல் தவிக்கிறார் ஸ்ரீதிவ்யா. ராணா தியேட்டரில் வரும் சீனிலெல்லாம் பெண் ரசிகைகளுக்கு கண்களில் ஆட்டோமேடிக்காக ஆர்ட்டின் சிம்பல் மின்னுகிறது. அதேபோல க்ளைமாக்ஸில் ராணா காரை எடுக்கும்போது, ஸ்லோவா ஓட்டுவாரே என்று மூவரும் தயங்க, டாப் கியரில் அவர் பறக்கையில் தியேட்டரில் க்ளாப்ஸ் மழை. பார்வதி, ராய் லட்சுமி, ப்ரகாஷ் ராஜ், சமந்தா என அனைவருமே தங்களுக்கு ஏற்ற பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருந்தாலும் சரண்யா பொன்வண்ணன் ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸரடித்திருக்கிறார்.

இடைவெளைக்குப் பிறகு தியேட்டரை கலகலப்பாக்க வைக்கிறது அவர் வரும் காட்சிகள் எல்லாம். கணவர் எம். எஸ். பாஸ்கர் வீட்டை விட்டுப் போய்விட, வேலையை விட்டு கோவைக்கே வரத்தயாராக இருப்பதாய் பாபி சிம்ஹா சொல்ல, அவரை தனியே அழைத்துப் போய் டேய்.. நான் பெங்களூர் வர்றேண்டா.. இங்க எவ இருக்கறது..எனக் கறாராகச் சொல்லிவிட்டு சொந்தக்காரர்கள் மத்தியில் சோக சீன் போடுவதாகட்டும், பெங்களூர் அபார்ட்மெண்டில் தன் நண்பிகளுடன் சீட்டுக்கச்சேரியில் அமர்ந்துகொண்டு பசிக்கிறதென புலம்பும் பாபி சிம்ஹாவிடம், ‘காலைல இருந்து கார்டே செட் ஆகலடா.. இப்பதான் ரம்மி சிக்கீருக்கு. பீட்சா ஆர்டர் பண்ணிக்கோஎன அதகளம் பண்ணுவதாகட்டும், ‘உன் அக்கா அமெரிக்கா வரச்சொல்றாடாபந்தா விட்டு விமான நிலையத்தில் கூலிங்க்ளாஸை இறக்கி டாடா செல்வதாகட்டும்.. சரண்யா - சக்ஸஸ்யா! 

படத்தின் முதல்பாதி ஆமைவேகம். நடிப்பது தெரிய, நடித்திருக்கிறார்களோ என எண்ண வைக்கிறது ஆரம்பகாட்சிகள். இடைவேளை வரை மெதுவாக நகரும் படம், இரண்டாம்பாதியில் நம்மை என்கேஜ்டாக்குகிறது. அதுவும் ராணாவின் ஃப்ளாஷ்பேக் தெரிந்து, ஸ்ரீதிவ்யா எடுக்கும் முடிவு லைக்ஸ் அள்ளுகிறதென்றால், பார்வதி - ஆர்யாவின் ஐ லவ் யூசொல்லிக் கொள்ளாத ரொமாண்டிக் மீட்டிங்குகள் ரீஷேர் செய்யத் தூண்டுகிற ரகம்.

குகனின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. ஆனால் இசையில் ஏதோ மிஸ்ஸிங். 

இயக்குனராக பொம்மரில்லு பாஸ்கருக்கு தமிழில் முதல் படம். ஆனால் பாஸ், அதே கதை. அதே காட்சிகள் மலையாளத்தை அப்படியே பிட் அடித்திருக்க வேண்டாம். துல்கரின் கேரக்டரை Graffitiயாக மலையாளத்தில் சித்தரித்திருப்பார்கள். அதாவது நாடோடியாக செல்லுமிடமெல்லாம் சுவற்றில் அனுமதி இல்லாமல் சித்திரம் வரைந்துவிட்டு போலீஸிடமிருந்து ஓடும் பாத்திரம். இதில் ஆர்யா செல்ஃபி ப்ரியராக வருகிறார். ஆபத்தான இடங்களிலெல்லாம் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். அது ஒன்றுதான் வித்தியாசம் என்றாலும், துல்கரின் கேரக்டரை அந்தப் பாத்திரம் பதியவைக்கிற அளவு செல்ஃபி ப்ரியராக ஆர்யாவின் பாத்திரத்தில் அழுத்தம் இல்லை. இப்பொதெல்லாம் எல்லாருமே அப்படித்தானே இருக்கிறார்கள் என்பதாலும்கூட இருக்கலாம். 

ஒரு க்ராண்ட் எக்ஸிபிஷனை எதிர்பார்த்து போனால், வெறும் ப்ளாஸ்டிக் கடைகளும், சின்னச் சின்ன ராட்டினங்களும் இருக்கிற அரசாங்க கண்காட்சியாக இருக்குமே... அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும் அதிலொன்றும் குறையில்லைதான். நல்ல கதை, இடைவேளைக்குப் பின்னான வேகம் ஆகியவை படத்தை காப்பாற்றுகிறது. படத்தின் முதல்பாதி நீளத்தை மட்டும் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால், இன்னும் பட பட பட்டாசாக வந்திருக்கும்.


-விகடன் விமர்சனம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஆதார் அட்டை இருந்தால், மூன்றே நாட்களில் பாஸ்போர்ட்!!

No comments :


ஆதார் அட்டை இருந்தால், மூன்றே நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம், அமல்படுத்தப்பட்டு உள்ளது,” என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் கூறினார். 

இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:

சாதாரண முறையில் விண்ணப்பிக்கும் போது, போலீஸ் அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு கட்டணம், 1,500 ரூபாய். இந்த நடைமுறையை, வெளியுறவு துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. இனிமேல் சாதாரண முறையில், 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது, ‘ஆதார்அட்டை, ‘பான்கார்டுஎனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு – 1 படிவம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பம் வழங்கினால், போலீஸ் அறிக்கை பெறாமல், பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன்பின், போலீஸ் அறிக்கை பெறப்படும்.

பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்க, புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும், ‘தத்கல்முறையும் அமலில் உள்ளது; அதற்கு கட்டணம், 3,500 ரூபாய்.

ஆவணங்கள் சரிபார்ப்பு பணிக்கு, விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக, ‘ஆன்லைனில்தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பெற வேண்டும். திங்கள் முதல், வெள்ளிக் கிழமை வரையிலான, ஐந்து நாட்களில், எந்த நாளிலும் வசதிப்பட்ட நேரத்தில் நேரில் ஆஜராவதை, ஆன்லைனில் உறுதி செய்யலாம். ஒரு முறை உறுதி செய்த தேதியை, மாற்றிக் கொள்ளவும் முடியும்.



போலீஸ் அறிக்கை பெற, விண்ணப்பதாரரின் விவரங்கள், மொபைல் போன் மூலம் அனுப்பும் முறை, தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. போலீசாரின் மொபைல் போனுக்கு, விண்ணப்பதாரரின் விவரங்கள் அனுப்பப்பட்டு, போலீஸ் சரிபார்ப்பு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட, 21 நாட்களுக்கு முன், மொபைல் போன் மூலம் அறிக்கையை பெற முடியும். பாஸ்போர்ட் உதவி
மையங்கள், அரசு கேபிள், ‘டிவிநிறுவனம் மூலம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படுகின்றன; இதற்கு, சேவை கட்டணம், 100 ரூபாய்.

மழை வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமடைந்தோருக்கு, கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்கும் வசதி, பிப்., 7 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஆவணங்களை பெற, பாஸ்போர்ட் அலுவலகங்களில், சமூக தணிக்கை மையம் துவங்கப்பட்டு உள்ளது. ஹஜ் பயணத்துக்கு பாஸ்போர்ட் கோருபவர்கள், பிப்., 8 வரை விண்ணப்பம் அளிக்கலாம். இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

விண்ணப்பதாரர்கள், 1,500 ரூபாய் கட்டணத்துடன், ஆதார் அட்டை, பான்கார்டு மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு – 1 படிவம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கினால், போலீஸ் அறிக்கை பெறாமல் பாஸ்போர்ட் வழங்கப்படும்.

கே.பாலமுருகன்
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)