முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 29, 2017

ராமநாதபுரம் சட்டக்கல்லூரி வகுப்புகள் ஜூலை முதல் துவங்குகிறது!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டம் புதிய அரசு சட்டக்கல்லூரி வகுப்புகள் தற்காலிகமாக நடப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் மணிகண்டன் மாவட்ட கலெக்டர் நடராஜனுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: 

மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியை பின்பற்றி செயல்படும் தமிழ்நாடு அரசு அவருடைய அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தொடர்ந்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
குறைந்த செலவில் தரமான சட்டக்கல்வியை மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக தமிழகத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையிலான அரசு சட்டக்கல்லூரிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு தீர்மானித்ததின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த சட்டக்கல்லூரி அமைப்பதற்கான கோரிக்கையை முதல்அமைச்சரிடம் வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிதாக ஒரு சட்டக்கல்லூரி 2017–18–ம் கல்வியாண்டில் தொடங்க முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



இந்த புதிய அரசு சட்டக்கல்லூரிக்குத் தேவையான ஆசிரியர்கள், நூலக புத்தகங்கள், அறைகலன்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ரூ.2 கோடியே 27 லட்சம் செலவினம் ஏற்படும். இப்புதிய சட்டக்கல்லூரியில் 2017–18–ம் கல்வியாண்டில் 3 ஆண்டு சட்டப்படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களும், 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களும் படிக்கும் வகையில் சேர்க்கை நடைபெறும். இப்புதிய சட்டக்கல்லூரி நிறுவுவதற்கான ஆரம்பக் கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக தனி அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுஉள்ளார்.

புதிய அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக செயல்பட சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் உரிய இடவசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் உரிய இடவசதி குறித்தும் மாவட்ட கலெக்டர் மற்றும் ராமநாதபுரம் புதிய சட்டக்கல்லூரிக்காக நியமிக்கப்பட்ட தனி அலுவலர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து தற்காலிக இடம் தேர்வு செய்து சட்டக்கல்லூரி நடத்தப்படும்.

ஜூலை முதல் வாரத்தில் சட்டக்கல்லூரி வகுப்புகள் தொடங்கும். அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய சட்டக்கல்லூரி அறிவித்த முதல்அமைச்சருக்கு ராமநாதபுரம் மாவட்ட மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பேபி, ராமநாதபுரம் தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)