முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 24, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் குடிநீர் பிரச்னை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் குடிநீர் பிரச்னையால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டிய அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை  நகராட்சிகளில் 3 நாள் முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. மண்டபம் பேரூராட்சியில் 5 நாள் முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களில் குடிநீரை குடம் ஒன்றுக்கு 10 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.  

அதுவும் மொத்தமாக டேங்கர் லாரியோடு வாங்கினால்தான்.  சில்லரையாக குடிநீர் கேட்டால் டேங்கர் ஓட்டுநர்கள் கொடுப்பது கிடையாது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஊரகப் பகுதிகள், சத்திரக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், உச்சிப்புளி பகுதிகளில் கடந்த பல மாதங்களாக கடுமையான குடிநீர் பிரச்னை நிலவுகிறது.


ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள கருங்குளம், சித்தார்கோட்டை உள்ளிட்ட பல கிராமப் பகுதியில் தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதுகுறித்து புகார்கள் தெரிவித்தாலும் அதிகாரிகள் தற்போது வரை மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை.  

மாவட்டத்தில் மழைக்காலம் ஆரம்பிக்க இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், தற்போதுள்ள குடிநீர் பிரச்னையைத் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த சந்திரன் கூறுகையில்,  “நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வருவது கிடையாது. பல மாதங்களாக  குடிநீர் இல்லாமல் சிரமம் அடைந்து வருகிறோம். குடிநீர் தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை.  

குடிநீர் கிடைக்காமல் சாலையோரத்தில் தேங்கும் நீரை குடித்து வருகிறோம்.  குடிநீர் கலங்களாகவும், அசுத்தமாகவும் உள்ளதால் தொற்றும்நோய் பரவி வருகிறது. இதனால் வயதானவர்களும், குழந்தைகளும் பாதிப்படைகின்றனர். வேறு வழியில்லாமல் சில இடங்களில் நாங்களே குழாயை உடைத்து தண்ணீரை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.  முறையாக அனைத்து இடங்களிலும் குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் வராதுஎன்றார்.

குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “பல இடங்களில் டேங்கை திறந்து பொதுமக்களே குடிநீர் எடுத்து வருகின்றனர்.  டேங்கின் அருகிலேயே குளிக்கவும் செய்வதால் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்படுகிறது.  இதைத் தவிர்க்க பொதுமக்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது. கிராமப் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் குடிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்என்றார்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)