(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 8, 2015

சென்னை-ராமேஸ்வரம் இடையே பகல்நேர அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும்- தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

No comments :
ராமநாதபுரம், : சென்னை-ராமேஸ்வரம் இடையே பகல் நேர அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இம்மாத இறுதியில் ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை யொட்டி ரயில்வே அமைச்சகம் தனது இணையதளம் மூலமாக ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என அறிவிப்பு செய்துள்ளது. 

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை பட்டியலை அனுப்பி வைத்துள்ளது. அதில் மதுரை ராமேஸ்வரம் மார்க்கத்தில் நான்கு செட் வண்டிகள் பகல் நேரத்தில் இயக்கப்பட்டது. தற்போது 2 செட் வண்டிகளே இயக்கப்படுவதால் பொதுமக்கள்
அவதிக்குள்ளாகி வருகின்றனர். கட்டணம் குறைவு மற்றும் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ரயில்களை கூடுதலாக இயக்காமல், குறைந்தளவில் 2 செட் ரயில்களே இயக்கும் ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கிறோம். இம்மார்க்கத்தில் குறைந்தது 5 செட் வண்டிகளாவது இயக்க வேண்டும். 


டெமோ என்ற டீசல் எலக்ட்ரோ மெசின் கோச் பெட்டிகளை இணைத்து இவ்வழித்தடத்தில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களை இரு மார்க்கங்களிலும் காலை தொடங்கி இரவு வரை தொடர்ந்து இயக்கினால் நல்ல வரவேற்பும், ரயில்வேக்கு நல்ல வருமானமும் கூடுதலாக கிடைக்கும். சென்னை-ராமேஸ்வரம் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு செட் விரைவு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தாலும், டிக்கெட் கிடைப்பதில்லை. எனவே இவ்வழித்தடத்தில் பகல்வேர அதிவிரைவு ரயில் தினசரி இயக்க வேண்டும். மானாமதுரை வரை வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரயிலையும் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம், ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினகரன்

No comments :

Post a Comment