(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 25, 2015

காஞ்சிரங்குடி வாலிபருக்கு நவீன முறையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை!! இராமநாதபுர அரசு மறுத்துவர்கள் சாதனை!!

No comments :
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் விபத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞருக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள இடுப்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடி கிராமத்தை சேர்ந்த மௌலானா மகன் சியாபுதீன்(19). இவருக்கு 15 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில், வலது இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு வலியுடன் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால், அவரது வலது கால் மூன்றரை அங்குலம் உயரம் குறைவாகவும் இருந்தது. அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வந்தார். ஏழ்மை நிலையில்லான இவரது குடும்பச் சூழ்நிலையில், உரிய மருத்துவச் சிகிச்சை பெற முடியாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில்,முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இடுப்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்காக, ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு மருத்துவக் குழுவினர் மூலம் நீண்ட நாள் உழைக்கக் கூடிய செராமிக் வகையான பந்து மற்றும் கிண்ணம் சிமெண்ட் இல்லாத முறையில் அறுவைச்சிகிசிசை மூலம் இடுப்பு மூட்டு மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வகையான சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.4லட்சம் வரை செலவாகும். முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.20லட்சம் மதிப்பில் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டு, சிறப்பான முறையில் அறுவைச் சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. சியாபுதீன் தற்போது நன்கு குணமடைந்து நடக்கும் நிலையில் உள்ளார். அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை நிலைய மருத்துவர் சகாயஸ்டீபன்ராஜ், எலும்பு முறிவு மருத்துவர் பெரோஸ்கான் ஆகியோரை ஆட்சியரும்,இளைஞரின் குடும்பத்தினரும்,உறவினர்களும் பாராட்டியுள்ளனர்.

இது போன்ற பல்வேறு சிகிச்சைகளும் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருவதாகவும்,பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என மருத்துவத்துறை இணை இயக்குநர் ரவி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


செய்தி: தினமணி

No comments :

Post a Comment