(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 5, 2015

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!!

No comments :
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசால் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்ட அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, நிலம் கையகப்படுத்தும் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதில் சில திருத்தங்கள் செய்து, தொழில் வளர்ச்சி, சாலை மேம்பாடு, துறைமுகங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் அமைத்தல் போன்றவற்றுக்காக நிலம் கையகப்படுத்த வகை செய்யும் அவசர சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு பிறப்பித்தது. இந்த அவசர சட்டம் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன.


அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், அது தொடர்பான மசோதாவை 6 மாதங்களுக்குள் நாடாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசு நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும். அதன்படி, ‘நிலம் கையகப்படுத்துதல், புனரமைப்பு மற்றும் மறுகுடியமர்த்தலில் நியாயமான இழப்பீடு பெறும் உரிமை (திருத்தம்) மசோதாஎன்ற பெயரிலான நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கிய தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற முயன்றது.

நாடாளுமன்ற மக்களவையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அங்கு இந்த மசோதா கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டு 9 திருத்தங்களுடன் நிறைவேறியது. மேல்சபையில் எதிர்க்கட்சிகளின் பலம் அதிகம் இருப்பதால், எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயன்றது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விவசாயிகளின் நலனுக்கு எதிரான இந்த மசோதாவை ஆதரிக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி விட்டன. அத்துடன் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட மசோதாவை மீண்டும் கொண்டு வந்தால் ஆதரிக்க தயார் என்றும் கூறின. இதனால், மேல்சபையில் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாளைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவேற்றி, அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும். இதனால், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அந்த புதிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு கடந்த 31 ஆம் தேதி ஜனாதிபதிக்கு மத்திய அமைச்சரவை சிபாரிசு செய்தது. அந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் நாளை காலாவதியாக இருக்கும் நிலையில், மறு அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து இருக்கிறார். இதன்மூலம் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஒரு பிரச்னை தொடர்பான அவசர சட்டத்தை இரு முறைதான் பிறப்பிக்க முடியும். எனவே, நிலம் கையகப்படுத்தும் இந்த அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவை இன்னும் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியாக வேண்டும். அப்படி மத்திய அரசால் நிறைவேற்ற முடியாமல் போனால் மூன்றாவது முறையாக அவசர சட்டத்தை பிறப்பிக்க முடியாது.

செய்தி: விகடன்

நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்றால் என்ன? முகவை முரசின் முந்தய பதிவுகளை காண இங்கு க்ளிக் செய்யுங்கள்


No comments :

Post a Comment