(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, May 29, 2015

மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்த இராமநாதபுர மாணவிக்கு ரூ.1 லட்சம் பரிசு!!

No comments :
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்த விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவிக்கு, ரூ. 1 லட்சம் பரிசாக  வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் கீழ் இயங்கி வருகிறது ராமேசுவரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி. இங்கு பயின்ற இப்பகுதியைச் சேர்ந்த மாணவி நித்யஸ்ரீ, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து, மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.


இதையடுத்து, பள்ளிக்குப் பெருமை சேர்த்ததற்காகவும், மற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பள்ளி நிர்வாகம் மாணவி நித்யஸ்ரீக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலை வழங்க முடிவு செய்திருந்தது. அதன்பேரில், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் சுவாமி சதானந்தா மஹராஜ், வியாழக்கிழமை மாணவி நித்யஸ்ரீயிடம் காசோலையை வழங்கிப் பாராட்டினார்.   

மேலும், மாணவியின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் முன்னாள் முதல்வர் ஜெயமணி, முதல்வர் சுரேஷ்குமார், துணை முதல்வர்கள் சங்கரலிங்கம், ஸ்ரீராம் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கும், பள்ளி நிர்வாகம் சார்பில் வாழ்த்து தெரிவித்து கௌரவிக்கப்பட்டனர்.    இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் சுவாமி ருத்ரானந்தா, பள்ளியின் முன்னாள் தாளாளர் சுவாமி சாரதானந்தா மற்றும் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


செய்தி: தினமணி

No comments :

Post a Comment