(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 13, 2015

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலையும் கிடைக்காமல் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் 100 ரூபாயும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 150 ரூபாயும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 300 வீதமும் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொகை, நேரடியாக மனுதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகஇருக்கவேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்தவராகவும் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தற்போது, கல்வி நிறுவனங்களில் பயின்று வருவோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழியாகக் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம்.

வங்கிக் கணக்கு புத்தக நகலுடன், சுய உறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து, உதவித்தொகை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம். இவர்களில் பத்தாம் வகுப்பும், அதற்குக் கீழ் படித்தவர்களுக்கும் மாதம் ரூ. 300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 375, பட்டதாரிகளுக்கு ரூ. 450 வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பெறுவோர்கள் வேறு எந்தத் துறையிலும் உதவித் தொகை பெறாதவர்களாக இருப்பது அவசியம்.

எனவே, உதவித் தொகையினை பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அனைத்து சான்றிதழ்களுடனும் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் அனைத்து வேலை நாள்களிலும் வழங்கப்பட்டு வருவதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments :

Post a Comment