(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 15, 2015

இராமநாதபுர மாவட்டத்தில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் மனைவியுடன் கைது!!

No comments :
நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 13 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த சில மாதங்களாக சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் வழி கேட்பது போல் நடித்து நகைகள் பறித்துச் செல்லப்பட்டன. திருப்புல்லாணி அருகே ரெகுநாதபுரம் பகுதியில் வள்ளி என்ற பெண்ணிடம் 3 பவுன் தாலி சங்கிலியும், குண்டூரணிவலசை பகுதியில் பூரணி என்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியும், இதே பகுதியைச் சேர்ந்த பூமயில் என்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியும் பறித்துச் செல்லப்பட்டது.

மேலும் ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையப் பகுதியில் 10 பவுன் சங்கிலியையும், உச்சிப்புளி அருகே 3 பவுன் சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்து சென்றதை தொடர்ந்து,

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், கீழக்கரை உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரி தலைமையில், ஏர்வாடி காவல் ஆய்வாளர் பால்பாண்டி, உதவி ஆய்வாளர்கள் ஜேசுதாஸ், தங்கசாமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலை ரெகுநாதபுரம் பகுதியில் வாகன சோதனை நடந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலீஸாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றார்.
சந்தேகமடைந்த போலீஸார் அவரை விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை அம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்த மூக்காண்டி மகன் சேதுபதி (29) என்பதும், இவர் தான் இருசக்கர வாகனத்தில் சென்று நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இவரையும், இந்த நகைகளை விற்க உடந்தையாக இருந்த இவரது மனைவி ராஜேஸ்வரியையும் கைது செய்த போலீஸார் இவர்களிடமிருந்து 13 பவுன் நகைகளை மீட்டனர்.

மேலும் நகைகளை மீட்கவும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த சேதுபதியின் கூட்டாளியை பிடிக்கவும் போலீஸார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


செய்தி: தினமணி

No comments :

Post a Comment