(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 12, 2015

பாகுபலி - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
சரித்திர கால திரைப்படங்கள் எடுப்பதற்கு ஒரு அசாத்திய தைரியம் தேவை. அதற்கான செலவும், தேவைகளும் ஒருபுறம் இருக்க சலிப்பு ஏற்படாமல் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டிய பொறுப்பும் இயக்குனருக்கு இருக்கிறது. அந்த விதத்தில் மகதீராவில் இருந்த பொறுப்புணர்வுடனும், நான் ஈ திரைப்படத்தில் இருந்த தைரியத்துடனும் பாகுபலி திரைப்படத்தை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி.


மலை மீதிருந்து குழந்தையுடன் உயிருக்கு போராடிய நிலையில் அடிவாரத்தை வந்தடையும் ரம்யாகிருஷ்ணன், தன் உயிரைக் கொடுத்து குழந்தையை காப்பாற்றுகிறார். மலைவாழ் இனத்தை சேர்ந்த ரோகினி அந்தக் குழந்தையை வளர்த்து வர, சாகச வீரனாக வளர்கிறார் பிரபாஸ். அருவியின் அடிவாரத்தில் வசித்து வரும் பிரபாஸ், மலைக்கு மேலே என்ன இருக்கும் என்ற கேள்வியால் மலை மீது ஏற பல முறை முயற்சி செய்யும் போது தமன்னா உதவி கிடைக்கிறது.

ஒரு வழியாக மேலே ஏறியபின்பு தான் தமன்னா ஒரு போராளி என்பதும் தங்களது ராணியான அனுஷ்காவை மீட்டெடுக்க சபதம் செய்திருப்பதும் தெரியவருகிறது. ’உன் லட்சியம் என் லட்சியம்’ என்று சபதம் எடுத்து மதிமகிழ் நாட்டை நோக்கி பயணமாகிறார்.

முதல் முறையாக அந்த நாட்டிற்கு பிரபாஸ் சென்றாலும், இவரை பார்ப்பவர்களெல்லாம் பாகுபலி என்றழைக்க, சிறிது நேரத்தில் பாகுபலி என்ற மந்திரம் நாடு முழுக்க பரவவும் யார் அந்த பாகுபலி என்ற ஆச்சர்யத்துடன் ராஜாவான ராணாவிடம் அடைபட்டிருக்கும் அனுஷ்காவை மீட்டுச் செல்கிறார். வழியிலேயே மதிமகிழ் நாட்டு இளவரசனால் பிடிக்கப்பட படைத்தளபதி சத்யராஜும் அங்கு வந்து சேர்கிறார்.

பிரபாஸின் முகத்தை பார்க்கும் சத்யராஜும் பாகுபலி என மண்டியிட்டு பாகுபலியைப் பற்றி விவரிக்கிறார். மதிமகிழ் நாட்டு ராஜா ராணா டகுபதிக்கும், பாகுபலியான பிரபாஸுக்கும் என்ன தொடர்பு? இந்த பிரபாஸ் யார்? என்பதை கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் ரசிகர்களுக்கு இயக்குனர் ராஜமௌலி விருந்தாக படைக்கிறார்.

வாட்டசாட்டமான பிரபாஸ் சிவலிங்கத்தை தூக்கிச் செல்வதெல்லாம் நம்பும்படியாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர் தாவித் தாவி மலையேறும் காட்சியெல்லாம் நகைச்சுவைக்கென தனியே ஒரு கதாபாத்திரம் இல்லாத வேலையை செய்கிறது. போதை தேவை என்று இரண்டாம் பாதியில் வரும் பாட்டு தேவையில்லாதது. இந்திய சினிமாவின் அடையாளம் என்றெல்லாம் எழுதவேண்டிய திரைப்படத்தில் இப்படி ஒரு பாடல் இருப்பதையும் சொல்ல வைத்துவிட்டாரே இயக்குனர். 


லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், மேட்ரிக்ஸ் வரிசையில் பாதியில் நின்றுவிட்டு, அடுத்த பாகத்தில் துவங்கும் கதை தான் பாகுபலி. இரண்டாம் பாதியில் சொல்லப்போகும் கதைக்கு முதல் பாதியில் ரசிகர்களை தயார்ப்படுத்தும் வித்தை ஒரு விதம். ஆனால் பாகுபலி இரண்டாவது பாகம் திரைப்படத்திற்காக முதல் பாகத்தில் ரசிகர்களை தயார்படுத்தியிருக்கிறார் ராஜமௌலி. ராணாவை பழி வாங்கி பிரபாஸ் எப்படி அரியணை ஏறப்போகிறார்? கிட்டப்பா ஏன் பிரபாஸின் அப்பாவை கொன்றார்? தமன்னா யார்? அனுஷ்கா யார்? என்று பல கேள்விகளை உருவாக்கி நம்மை இரண்டாம் பாகத்திற்காக காக்க வைத்திருக்கிறார் ராஜமௌலி.

பிரம்மாண்டம்!!! பிரம்மாண்டம்!!! அனைத்திலும் பிரம்மாண்டம்! காவல் வீரர்கள் சிலைகளைக் கூட மலை உயரத்திற்கு அமைத்து, கிராஃபிக்ஸில் விளையாடியிருக்கிறார்கள் படம் முழுவதும். சிறு பட்டாம்பூச்சிக்கு கூட நுணுக்கமாக ஓவியம் போல் வரைந்து அழகுபடுத்தியிருக்கிறார்கள். இயக்குனருக்கு அடுத்து அதிகம் மெனக்கெட்டவர் கலை இயக்குனராகத்தான் இருப்பார்.

ஒளிப்பதிவில் கலக்கியிருக்கிறார் செந்தில்குமார். எது கிராஃபிக்ஸ்? எது ஒரிஜினல்? என கண்டுபிடிக்க ரசிகர்கள் கஷ்டப்படுவதே ஒளிப்பதிவாளரின் திறமைக்குச் சான்று. அனைவருடன் ஒப்பிடும் போது இசையமைப்பாளருக்குத் தான் குறைந்த வேலை. ஆனாலும் காட்சிக்கு ஏற்ப இசையில் விஸ்வரூபத்தைக் காட்டி தன்னையும் நிலைநிறுத்தியிருக்கிறார். பாடல்கள் வெகுவாக கவரவில்லை மரகதமணி சார். மதன் கார்க்கியின் வசனங்கள் வழக்கமான சரித்திரகால படங்களில் இருப்பது போல் நம்மை வேற்றுகிரகவாசிகளாக உணர வைக்காமல் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருக்கின்றன. 

நடிகர்கள் அனைவருமே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். பிரபாஸ் க்ளோஸ்-அப் காட்சிகளில் சிரிக்கும் சிரிப்பைத் தவிர அவரது முயற்சிகள் அனைத்தும் பாராட்டுக்குறியது. ஒரே ஒரு பாட்டில் கிளாமர் குயினாக வலம் வந்தாலும், கத்தி சண்டை, வில் வித்தை என அசத்துகிறார் தமன்னா. லட்சியத்தை நான் நிறைவேற்றுகிறேன் என கண்ணில் நீருடன் மன்றாடுகிறாரே ஒரு காட்சி போதும். அனுஷ்காவைப் போன்ற ஒரு அழகு நடிகை இப்படி ஒரு கதாபாத்திரத்திற்கு எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்விக்கு பதில் இரண்டாவது பாகத்தில் பிரபாஸுடன் நடிக்கும் காதல் காட்சிகளில் கிடைக்கும் என நம்புவோம்.

சுள்ளி பொறுக்கும் பைத்தியமா நான்?’ என ஒரு கர்ஜனை கொடுப்பாரே சத்யராஜ் உண்மையில் தான் பயந்து போனாரோ என்னவோ? அப்படி ஒரு ரௌத்தரமான நடிப்பு. சத்யராஜ், நாசர் எப்படி நடித்திருப்பார்கள் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால் படையப்பாவுக்குப் பிறகு ரம்யாகிருஷ்ணனுக்கு அடித்தது லாட்டரி. பின்னி பெடலெடுத்துவிட்டார். ‘இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாஸனம்’ என்ற வசனம் ரம்யா கிருஷ்ணன் குரலாலும் நடிப்பாலும் கம்பீரம் அடைகிறது. 

இப்படி படத்தில் பாராட்ட எவ்வளவோ விஷயங்கள் இருக்க, முதல் பாதியில் ராஜமௌலி ரசிகர்களை ஏமாற்றிவிட்டதையும் சொல்லியே ஆகவேண்டும். இரண்டாம் பாதியில் அரபு குதிரையைப் போல் அசுர வேகத்தில் திரைக்கதை மீது நம்மை உட்காரவைத்து கொண்டு சென்றதற்காகவும், அடுத்த பாகத்தில் நிச்சயம் ரசிகர்களை மீண்டும் பிரம்மாண்டத்தில் ஆழ்த்துவார் என்ற நம்பிக்கை இந்த படத்திலேயே ஏற்பட்டுவிட்டதாலும் அடுத்த பாகத்திற்காக காத்திருப்போம். பாகுபலி படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் இந்திய சினிமா அடுத்த கட்டத்திற்கு சென்றிருப்பதை பார்த்த வரலாற்று சாட்சியங்கள்.

பாகுபலி - பிரம்மிப்பு!


விமர்சனம்: நக்கீரன்

No comments :

Post a Comment