(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 20, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான சங்ககால ஊர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!!

No comments :


தமிழகத்தை ஆண்ட சேரசோழ பாண்டியர்களில் மிகப்பழமையானவர்கள் பாண்டியர்கள் தான் என்று கூறப்படுகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சி பகுதிகளில் ஒன்றாக ராமநாதபுரம் மாவட்டம் திகழ்ந்தது.

தொன்மை சிறப்பு வாய்ந்த இந்த மாவட்டத்தில் அழகன்குளம், தேரிருவேலி ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் இந்த ஊர்கள் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை என ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக அழகன்குளம் கி.மு.500 முதல் கி.பி. 1200 வரை வெளிநாடுகளுடன் வாணிபம் செய்து பிரபலமாக இருந்த துறைமுக நகரமாகும். தேரிருவேலி கி.மு.300 முதல் கி.பி.300 வரை மக்கள் வாழ்ந்த பகுதியாகும். இந்த அழகன்குளம், தேரிருவேலி ஆகிய பகுதிகள் ஏற்கனவே ரோமானியர் வணிக மையமாக திகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதுதவிர சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில் மத்திய தொல்லியல் துறையால் செய்யப்பட்ட அகழாய்வு மூலம் அந்த பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வைகையின் கரையில் 293 சங்ககால ஊர்கள் இருந்ததையும் மத்திய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் 2 ஊர்கள்
இந்தநிலையில் தற்போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தை சேர்ந்த கீழச்சீத்தை, வெள்ளா மரிக்சுக்கட்டி ஆகிய 2 ஊர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில் ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கையில் இருந்து திருப்புல்லாணி செல்லும் வழியில் கீழச்சீத்தை என்ற ஊரில் கானத்திடல் என்ற பகுதியில் கசிவுநீர் குட்டை தோண்டப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு, மாவட்ட அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நல டாக்டர் ராஜமோகன் உள்ளிட்ட குழுவினர் மேற்பரப்பாய்வு செய்தனர்.

அப்போது அந்த பகுதியில் ரோமானிய ரவுலெட்டட் ஓடுகள், சீன போர்சலின் ஓடுகள், கருப்புசிவப்பு பானை ஓடுகள், சிறு இரும்புக்கோடரி, இரும்புத்தாதுக்கள், இரும்புக்கழிவுகள், குறியீடு உள்ள பானை ஓடுகள், நெசவுத்தொழிலுக்கு பயன்படும் தக்களி, பாண்டி ஆட்டத்திற்குரிய சில்லுகள், சுடுமண் விளக்கு, மான் கொம்புகள், தேய்ப்பு கற்கள், சங்குகள் போன்றவை கண்டுபிடிக்ககப்பட்டு உள்ளன.

சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த பழங்கால பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளன. கருப்புசிவப்பு பானை ஓடுகள் கி.மு.300 முதல் கி.பி.200 ஆண்டுகள் வரையிலான சங்க காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதால் இவற்றை சங்ககால பானை ஓடுகள் என்று அழைக்கின்றனர்.

ரோமானிய ரவுலெட்டட் ஓடுகள், சீன போர்சலின் ஓடுகள் கிடைத்திருப்பதால் இந்த பகுதியினர் ரோமானியர், சீனர்களுடன் வணிகம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. நெசவுத்தொழிலுக்கு பயன்படுத்தப்படும் தக்களி கிடைத்துள்ளதை பார்க்கும்போது நூல்நூற்க பயன்படுத்தி ஆடை நெய்து இருக்கலாம் என அறியப்படுகிறது. சங்குகள், பவளப்பாறைகள், மான்கொம்புகள் கிடைத்திருப்பதன் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

இதேபோல, கீழச்சீத்தையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளா மரிச்சுக்கட்டி கண்மாயில் இந்த குழுவினர் களஆய்வு மேற்கொண்டபோது கருப்புசிவப்பு பானை ஓடுகள், கூரை ஓடுகள் கிடைத்துள்ளதால் அந்த பகுதியிலும் சங்ககாலத்தில் ஒரு ஊர் இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இந்த 2 ஊர்களும் தேரிருவேலியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் மதுரை செல்லும் வணிகப்பாதையாக இந்த பகுதி இருந்திருக்கலாம் என்று கருப்படுகிறது.

எனவே, இந்த இரு ஊர்களையும் தொல்லியில் துறையினர் முழுஅளவிலான அகழாய்வு செய்து வரலாற்று சிறப்புகளை அனைவரும் அறியச்செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment