(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 27, 2015

ராமநாதபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்: போலீஸ் அதிகாரிகள் சமரசம்!!

No comments :
பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதி கழிவுநீரை கொட்ட பொதுமக்கள் திடீர் எதிர்ப்பு தெரிவித்தனர். 
மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதி ராமநாதபுரம் நகராட்சியையொட்டி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்பட அரசின் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தக பிரமுகர்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்டுவதற்கு இடம் இல்லை. இதையடுத்து ஊராட்சி தலைவர் சித்ரா மருது மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்ததன் பேரில் இந்த ஊராட்சியின் கழிவுநீரை டேங்கர் லாரிகள் மூலம் எடுத்துச்சென்று நகராட்சி எல்லைக்கு உட்பட்ட நாகநாதபுரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் நீர்த்தேக்க தொட்டியில் கொட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல பட்டணம்காத்தான் ஊராட்சி பணியாளர்கள் கழிவுநீரை எடுத்துக்சென்று கழிவுநீர்த்தேக்க தொட்டியில் கொட்டச்சென்றனர். அப்போது நாகநாதபுரம், இந்திராநகர் பகுதி மக்கள் கழிவுநீரை இங்கே கொட்டக்கூடாது என்றும், சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும் கூறி திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் தாசில்தார் தர்மர், உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ், நகரசபை உதவி பொறியாளர் சுப்பிரமணிபிரபு, என்ஜினியர் கருணாநிதி, சுகாதார ஆய்வாளர் அரிதாஸ், பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது, துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று அந்த பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதுகுறித்து பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது கூறியதாவது:- 

பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கலெக்டர் சிறப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த மாவட்டத்தை சுகாதாரமாகவும், குப்பைகள் இல்லாத மாவட்டமாகவும், நோய்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்கள் சுகாதாரமாக வாழ தேவையான நடவடிக்கைகளை செய்து வருகிறார். 

கழிவுநீரை பொது இடங்களில் கொட்டினால் நோய் பரவும் என்பதற்காக நகராட்சி பகுதியான இந்திரா நகர், நாகநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள கழிவுநீர் தேக்க தொட்டியில் பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதி கழிவுநீரை கொட்ட அனுமதி வழங்கி உள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுநீர் வாகனங்களை கழிவுநீர்தேக்க தொட்டி அமைந்துள்ள வளாகத்திற்குள்ளே கொண்டு சென்று உடனுக்குடன் பம்ப் செய்து கடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். .

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment