(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 1, 2015

மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பங்களுக்குத் தரப்படும் நிவாரண உதவித் தொகையை ரூ. 4 லட்சமாக உயர்வு!!

No comments :
தமிழகத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பங்களுக்குத் தரப்படும் நிவாரண உதவித் தொகையை ரூ. 4 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வடகிழக்கு பருவ மழை தற்பொழுது தமிழகம் எங்கும் பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழ்நாடு அரசு வருவாய்த்துறையின் சார்பில் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் இன்று காலை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் முதன்மைச் செயலர்- வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்யமிஸ்ரா, பேரிடர் மேலாண்மை இணை ஆணையர் லில்லி, சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் பாபு இராஜேந்திரன் பேரிடர் மேலாண்மை இணை இயக்குநர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இம்மையத்தில் மாவட்டங்களிலிருந்து நாள் தோறும் பெறப்படும் மழையின் அளவு, கனமழையை எதிர்கொள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறிப்பாக, தென் மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள், பாதிக்கப்பட்டுள்ள குடிசைகள், வீடுகள், மனிதமற்றும் கால்நடை உயிரிழப்புகளின் விவரங்கள் குறித்து, அமைச்சர் விரிவான ஆய்வினை மேற் கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பெயரில் தொடர் மழை பெய்து வரும் பகுதிகளில், அமைச்சர் பெருமக்களும் அலுவலர்களும் விரைந்து சென்று போர்க்கால அடிப்படையில், மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு வருவதோடு மட்டுமின்றி, பாதிக்கப்பட்டோருக்கான உரிய நிவாரண உதவிகளையும் விரைந்து வழங்கி வருகிறார்.

குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதா, பேரிடர்களின் போது உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண உதவித் தொகையினை 2.50 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

கால்நடைகள் இழப்பிற்கு வழங்கப்படும் உதவித் தொகையினை 20,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக உயர்த்தியும், ஆடுகள் இழப்பிற்கு வழங்கப்படும் உதவித் தொகையானது 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தியும், பகுதியாக சேதமடையும் குடிசைகளுக்கு உதவித் தொகையானது 2,500 ரூபாயிலிருந்து 4,100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிடவும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு 5,000 ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளார்.


அதனடிப்படையில் இந்த நிவாரண உதவிகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது இயற்கை பேரிடர்கள் நிகழும் காலங்களில் மக்களை நாடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவதோடு, நிருவாகத்தின் முதுகெலும்பாக தொடர்ந்து விளங்கிடும் துறையே வருவாய்த் துறை என்று முதல்வர் ஜெயலலிதா வருவாய்த் துறையின் செயல்பாடுகள் குறித்து மிகவும் பெருமையாக குறிப்பிட்டு உள்ளார். அதனை வருவாத்துறை அலுவலகர்கள் அனைவரும் நினைவில் கொண்டு, உரியஉடனடி நிவாரண நடவடிக்கைகளை பிறதுறைகளுடன் இணைந்து, காலதாமதமின்றி வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment