(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, December 25, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற புதிய தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: 

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற பட்டம், பட்டயப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்த, தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


நீட்ஸ் என்ற இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் துவங்க குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிக பட்சம் ரூ. ஒரு கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிக் கடன் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால் 35 வயதுக்கு மிகாமலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின,பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினராக இருந்தால் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். வருமான வரம்பு ஏதுமில்லை. 
3 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் அல்லது அதிக பட்சமாக ரூ. 25 லட்சம் மானியமும், 3 சதவிகிதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

தனிநபர், புதிய தொழில் முனைவோர், பங்குதாரர் நிறுவனங்களும், இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். நடப்பு நிதியாண்டிற்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 19 நபர்களுக்கு ரூ.190 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


எனவே, தொழில் தொடங்க விருப்பம் உள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04567-230497 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம். இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment