முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 21, 2015

தங்கச்சிமடம் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் ஐந்து லட்சம் செலவில் புதிய கழிப்பறைகள் திறப்பு நிகழ்வு ! !

No comments :
தங்கச்சிமடம் ஊராட்சி ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கழிப்பறைகள் கட்டிடம் ரூபாய்.5.00 ஐந்து லட்சம் செலவில் திறப்பு நிகழ்வு ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் ஒன்றியம், தங்கச்சிமடம் ஊராட்சி, தங்கச்சிமடம் கிராமத்தில் புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ( தரம் உயர்த்தப்பட்டுள்ளது )

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2014 - 2015 ம் ஆண்டின் மூலம் ரூ.ஐந்து லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட பத்து கழிப்பறைகள் மற்றும் பத்து சிறுநீர் பிறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான
பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் திறந்து வைத்தார்கள்.





இந்த நிகழ்வில் தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஞானசீலன் அவர்களும், தங்கச்சிமடம் மீனவ பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சகோதரி.ஆரோக்கியமேரி அவர்களும்
இப்பள்ளியின் தாளாளர் சகோதரி.வ.பிலோமினா அவர்களும், தலைமை ஆசிரியை சகோதரி.சு.மனோகரி அவர்களும் மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவிகள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் பணியாளர்கள் மேலும்
மனிதநேய மக்கள்கட்சியின் தென் மண்டல தேர்தல் அதிகாரி சகோ.வாணி முஹம்மது சித்திக் அவர்களும், மாவட்ட செயலாளர் சகோ.B.அன்வர் அலி அவர்களும், மமக பகுதி பொறுப்பாளர் சகோ.இன்னாசி லடீஸ் அவர்களும்
ஆற்றாங்கரை கிளை செயலாளர் சகோ.நூருல் அஃப்பான் தங்கச்சிமடம் சகோ.ஆஸிக் உட்பட கிளை நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் அங்குள்ள ஆசிரியை அவர்கள் கலந்துகொண்ட அனைவருக்கும் பள்ளியின் சார்பாக நன்றி கூறினார்.

செய்தி: இராபநாதபுர MLA அலுவலகம்

கீழக்கரை அனைத்து கட்சி கூட்டம் - வியாழக்கிழமை (ஜூன் 25) நகராட்சி முன் மக்கள் திரள் போராட்டம்!!

No comments :
கீழக்கரையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்  ஹூசைனியா மகாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.



நகராட்சி ஆணையரை மாற்ற முயற்சி மேற்கொண்டு வருவதைக் கண்டித்து இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஹமீதுகான், கே.ஆர்.டி.கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. சார்பில் கென்னடி, சாகுல்ஹமீது, கம்யூ.,சிபிஎம்., மகாலிங்கம், வரகுணசேகரன், த.மு.மு.க. சார்பில் முஹம்மது சிராஜூதீன், இக்பால், எஸ்.டி.பி.ஐ.கட்சி சித்தீக், காதர், விடுதலைசிறுத்தைகள் கட்சி ரகுமான், அற்புதக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வியாழக்கிழமை (ஜூன் 25) நகராட்சி முன் மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கானஏற்பாடுகளை ஹாஜா நஜிமுதீன், காதர் ஆகியோர் செய்திருந்தனர்.





செய்தி: திரு,. தாஹிர், கீழக்கரை





பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!!

No comments :
பாம்பன் மற்றும் ராமேசுவரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

 ஒடிசா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் பாம்பன், ராமேசுவரம் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது.

 இதையடுத்து சனிக்கிழமை இரவு பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

எனவே மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


எலி - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: வடிவேலு, சதா, ஆதித்ய மேனன், பிரதீப் ராவத், மகாநதி சங்கர்
ஒளிப்பதிவு: பால் லிவிங்ஸ்டன்
இசை: வித்யாசாகர்
தயாரிப்பு: சிட்டி சினி கிரியேஷன்ஸ்
இயக்கம்: யுவராஜ் தயாளன்



தனது மறுபிரவேசப் படமான தெனாலிராமனில் விட்டதைப் பிடிக்க, அதே இயக்குநரின் துணையுடன் எலி அவதாரமெடுத்திருக்கிறார் காமெடிப் புலியான வடிவேலு. இயக்குநரை வடிவேலு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையா.. அல்லது காமெடிப் புலியான வடிவேலுவை இயக்குநர் சரியாக உபயோகப்படுத்த தவறிவிட்டாரா? அட இருவரிடமுமே சரக்கு அவ்வளவுதானா? என்றெல்லாம் கேட்க வைக்கிறது இந்த எலி. 60களில் நடக்கும் கதை. சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்ட காலகட்டம். அந்த நேரத்தில் சிகரெட் கடத்தலில் நம்பர் ஒன்னாகத் திகழும் பிரதீப் ராவத்தைப் பிடிக்க திட்டமிடுகிறது போலீஸ்.


தனது குழுவுடன் சின்னச் சின்ன திருட்டுகள் செய்து சாமர்த்தியமாகத் தப்பி வரும் வடிவேலுவை உளவாளியாகப் பயன்படுத்தி, ராவத்தைப் பிடிக்க முயற்சிக்கிறது. வடிவேலும் உளவாளி எலியாக, ராவத் கூட்டத்துக்குள் சாமர்த்தியமாகப் புகுந்துவிடுகிறார். இறுதியில் அந்த எலி வில்லனைக் காட்டிக் கொடுத்ததா... சிக்கிக் கொண்டதா என்பது க்ளைமாக்ஸ். 60களில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தில் இருந்த 'மதராஸை'க் காட்ட ரொம்பவே பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம், ஏதோ ஒரு பழைய ஈஸ்ட்மென்ட் கலர் படம் பார்க்கும் உணர்வைத் தருகின்ற பல காட்சிகள். அதுவும் வடிவேலுவைக் கடத்தும் ஒரு காட்சி. பிரதீப் ராவத்தின் கோட்டை, உள்ளே சீட்டாடிக் கொண்டிருக்கும் அடியாட்களையெல்லாம் பார்க்கும்போது குடியிருந்த கோயில் நினைவுக்கு வருகிறது.

இந்தக் கதையில் யாராவது ஒரு ஆக்ஷன் ஹீரோ நடித்து, வடிவேலு பிரதான காமெடியனாக இருந்திருந்தால் படத்தின் ரேஞ்சே வேறு. ஆனால் 2.15 மணிநேரப் படத்தில் அத்தனை காட்சிகளிலும் வடிவேலுவே வருவது அலுப்பைத் தருகிறது. தெனாலிராமனில் வடிவேலுவும் - யுவராஜ் தயாளனும் செய்த அதே தவறு இந்தப் படத்திலும். படம் முழுக்க வடிவேலு இருக்கிறார். ஆனால் சிரிப்பு எங்கோ ஓரிரு இடங்களில் மட்டுமே எட்டிப் பார்க்கிறது. குறிப்பாக படம் துவங்கும் முன் போடப்படும் குடி-புகைக்கு எதிரான பிரச்சார கார்டில்! இவரை ஊமை என்று நினைத்து கைதிகள் ஊமைப் பாஷை பேசுவதும், நிஜமான ஊமைகளிடம் இவர் மாட்டிக் கொள்வதும் அரதப் பழசான காமெடிகள்.

உடனிருக்கும் காமெடியன்கள் ஒருவர் கூட சோபிக்கவில்லை. பாவா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், வெங்கல்ராவ் போன்றவர்களை ஓரிரு காட்சிகளில் ஓரம்கட்டியிருக்கிறார்கள். சதா வருகிறார். இரண்டு பாடல்களுக்கு நடனமாடுகிறார். பார்க்க பவாயில்லை என்று சொல்லுமளவுக்கு மேக்கப். கண்டிப்பாக இனி கொஞ்ச நாளைக்கு வடிவேலு டூயட் பாடக் கூடாது, பெண் வேஷத்தில் வரக் கூடாது என்று தடை போட வேண்டும்.

படத்தில் வரும் மேரே சப்னோ கி ராணி.. பாடல் பெரிய இளைப்பாறல். பின்னணி இசை என்ற பெயரில் பழைய ஜேம்ஸ் பாண்ட் பட ட்ராக்கைப் போட்டிருக்கிறார் வித்யாசாகர். பழைய காலப் படம் என்று ஒளிப்பதிவாளருக்கு ஒவ்வொரு காட்சியின் போதும் சொல்லிக் கொண்டே இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அரதப் பழசாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்துக்குப் படம் பாடி லாங்குவேஜை மாற்றி, குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்த அந்த கைப்புள்ளயும், குளத்துப் பாண்டியும், ஸ்டைல் பாண்டியும் இன்னும் கண்முன் வலம் வருகிறார்கள். இன்னும் நம்பிக்கையிருக்கிறது... காமெடிப் புயல், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

விமர்சனம்: இன் இண்டியா