முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, July 30, 2015

ராணுவ மரியாதையுடன் மக்கள் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!!

No comments :
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாரடைப்பால் காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இரவு முழுவதும் கலாம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிறப்பு பிரார்த்தனைகளுக்கு பின் அவரது வீட்டின் அருகில் உள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளிவாசல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சிறப்பு தொழுகை நடைபெற்றது

பின்னர் அங்கிருந்து உடல் அடக்கம் செய்யப்படும் பேக்கரும்பு பகுதிக்கு ராணுவ வாகனத்தில் கலாம்  உடல் வந்தடைந்தது.

அங்கு, அப்துல்கலாம் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், உதயகுமார் ஆகியோர் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.


இதைத்தொடர்ந்து, கலாம் உடலுக்கு முப்படை தளபதிகள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், கலாமின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் பேக்கரும்பில் அப்துல்கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.