முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 22, 2015

தொலைதூர கல்வியில் வழங்கப்படும் அனைத்து பட்டங்களும் அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்படிப்புகளுக்கு செல்லத்தக்கவை என மத்திய அரசு அறிவிப்பு!!

No comments :
திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வியில் வழங்கப்படும் அனைத்து பட்டம் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்படிப்புகளுக்கு செல்லத்தக்கவை என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி அனுமதியுடன் அண்ணாமலை பல்கலைக்கழகம் உட்பட சில பல்கலைகளில் 1979 முதல் திறந்த நிலை மற்றும் தொலைதுார கல்வியில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. துவக்கத்தில் இந்த முறையில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு தரப்பட்டதோடு உயர்கல்வி கற்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் திறந்தநிலை பல்கலையால் வழங்கப்பட்ட பிளஸ் 2 படிக்காமல் நேரடி பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது.

பின் பிளஸ் 2 முடித்து திறந்தநிலை படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டது. இதனால் பிளஸ் 2 படிக்காமல் நேரடி இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.



இந்நிலையில் மத்திய அரசு இரு தினங்களுக்கு முன் புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் திறந்த நிலை பல்கலையின் பட்டப்படிப்புகள் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கு செல்லத்தக்கவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பால் திறந்தநிலை படிப் பில் பட்டம் பெற்ற லட்சக்கணக்கானோர் அரசு வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய நம்பிக்கை பெற்றுள்ளனர்.

கடந்த 1956ம் ஆண்டு யு.ஜி.சி சட்டப்பிரிவு - 3 இன் படி நடத்தப்படும் நிகர்நிலை பல்கலை மத்திய மாநில அரசின் சட்டப்படி துவங்கப்பட்ட பல்கலைகளில் யு.ஜி.சி அனுமதி பெற்று வழங்கப்பட்ட அனைத்து பட்டங்கள் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் அனைத்து வகை அரசு வேலைவாய்ப்புக்கும் தானாகவே செல்லத்தக்கவை.

மத்திய அரசின் உத்தரவுப்படி திறந்த நிலை கல்வியில் பெற்ற பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு செல்லத்தக்கவை என்றாலும் எப்போது முதல் வழங்கப்பட்ட பட்டங்கள் என்பது அரசாணையில் தெளிவாக இல்லை. அதனால் பிளஸ் 2 முடிக்காமல் நேரடியாக பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இந்த அரசாணை பொருந்துமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: ஒன் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள 8 இ- சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
தமிழகம் முழுவதும் உள்ள இ- சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "தமிழகம் முழுவதும் 339 இடங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், 54 கோட்ட அலுவலகங்களை தவிர்த்து 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 285 இடங்களில் நிறுவப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

புதிதாக பாஸ்போர்ட் பெற விரும்புவோர், ஏற்கனவே வைத்துள்ள பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்புவோர் மற்றும் தட்கல் முறையில் விண்ணப்பிக்க விரும்புவோர் இம்மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இச்சேவை இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் தற்போது 8 சேவா கேந்திரா மையங்கள் செயல்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் இறுதிக்குள் 9வது மினி சேவா கேந்திரா மையம் பாண்டிச்சேரியில் ஏற்படுத்தப்படும்.

சென்னை மண்டல அலுவலகத்தில் மட்டும் 4 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரூபாய் 1500 பாஸ்போர்ட், சேவை கட்டணம் ரூபாய் 155 என மொத்தம் ரூபாய்1655 கட்டணமாக செலுத்தி இச்சேவையை பயன்படுத்தலாம். பாஸ்போர்ட் பெறுவதற்காக காவல்துறை மூலம் சோதனை செய்ய விண்ணப்பிப்பவரின் ஆவணங்கள் தற்போது பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இப்பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆன் லைனிலேயே அனைத்து ஆவணங்களையும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம், விண்ணப்பிப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் துரிதமாக கிடைக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


செய்தி: ஒன் இண்டியா



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பரமக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கோஷ்டி தகராறில் காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு!!

No comments :
பரமக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் இரு கோஷ்டியினர் மோதிக் கொண்டதில், வீடு புகுந்து தாக்கப்பட்டு காயமடைந்த ஒருவர் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பரமக்குடியில் கடந்த செப் 18ஆம் தேதி நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டு விட்டு, திரும்பி வந்த போது மாதவன் நகர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனி (38) தரப்பினரும், சந்தைக்கடைத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் தரப்பினரும் மோதிக் கொண்டனர்.

இதில் சுரேஷ் தரப்பைச் சேர்ந்த சந்துரு, விக்னேஷ் ஆகிய இருவரையும் பழனி தாக்கினாராம். இதில் காயமுற்ற அவர்கள் இருவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையறிந்த சுரேஷ் கோஷ்டியினர் அன்று இரவே பழனியின் வீட்டுக்குச் சென்று பழனி மற்றும் அவரது தந்தை ராமசாமி ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பழனி, பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.


இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் ராமசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.20 லட்சம் மோசடி!!

No comments :


இராக் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6.20 லட்சம் மோசடி செய்த முகவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், இராக்கில் இருப்பவர்களை சொந்த ஊருக்கு திரும்ப அழைத்து வருமாறும் கமுதி அருகே பாக்குவெட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாக்குவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்களான பொன்னுச்சாமி மகன் ராஜேந்திரன்(27), திருமால் மகன் சசிக்குமார் (25), நல்லையன் மகன் தங்கம்(40) மற்றும் கமுதி அருகே கடம்பக்குளம் கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் கோபால்சாமி (22) ஆகிய 4 பேரும் ஈராக் நாட்டுக்கு கட்டடத் தொழில் செய்ய அதே பாக்குவெட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு முகவரிடம் தலா ரூ.1.55 லட்சம் வீதம் கொடுத்துள்ளனர்.


இந்நிலையில் அவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு 4 பேரையும்இராக் நாட்டில் தஸ்ரதா என்ற இடத்துக்கு வேலைக்கு அனுப்பி வைத்தாராம். ஆனால் அங்கு அவர்களுக்கு எந்த வேலையும் தராமல் தங்க வைத்திருப்பதுடன் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் அந்த முகவர் ஏமாற்றி வருவதாகவும், எனவே அந்த 4 பேரையும் சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்றும், முகவரிடம் கொடுத்த தொகை ரூ.6.20 லட்சத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்றும்  தங்கத்தின் சகோதரர் மூர்த்தி, கோபால்சாமியின் சகோதரர் ஜி.சத்தியேந்திரன், ராஜேந்திரனின் தந்தை பொன்னுச்சாமி, சசிக்குமாரின் தந்தை திருமால் ஆகியோர் ராமநாதபுரம் ஆட்சியர் க.நந்தகுமாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)