முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 26, 2015

குற்றம் கடிதல் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
எந்தக் கதாபாத்திரத்தையும் மையப் படுத்தாமல் ஒரு சம்பவத்தை அல்லது பிரச்சினையை மையப் படுத்தும் படங்களின் வகையைச் சேர்ந்தது பிரம்மாவின் இயக்கத்தில் வந்துள்ள குற்றம் கடிதல்’. யதார்த்தத்தைச் சமரசம் செய்துகொள்ளாமல் விறுவிறுப்பாக இதைக் கையாண்டுள்ள பிரம்மாவின் முயற்சி பாராட்டத்தக்கது.

லாரியில் பயணம் செய்யும் அந்த இளம் ஜோடியின் முகத்தில் பெரும் கலவரம். குறிப்பாக அந்தப் பெண்ணின் முகத்தில். அதற்கான காரணத்தைச் சொல்வதாக விரிகிறது படம்.

தனியார் பள்ளியொன்றில் ஆசிரியை யாகப் பணியாற்றுபவர் மெர்லின் (ராதிகா பிரசித்தா). திருமண விடுப்பு முடிந்து பள்ளிக்குச் செல்கிறார். சக ஆசிரியையின் வேண்டுகோளை ஏற்று அவரது வகுப்பை கவனித்துக்கொள்ளச் செல்கிறார். அங்கே மெர்லின் செய்யும் ஒரு சிறு தவறு ஒரு பையனைக் கடுமை யாகப் பாதித்துவிடுகிறது. மெர்லினையும் பெரும் சிக்கலில் தள்ளி விடுகிறது.

அந்தப் பையன் என்னவானான்? ஆசிரியைக்கு என்ன நடக்கிறது? இந்த இருவரையும் சுற்றியிருப்பவர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி அணுகு கிறார்கள்? பிரச்சினையின் வேர் எப்படிப் பார்க்கப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலாகப் பரபர வென்று நகர்ந்து செல்கிறது படம்.
ஒரு சம்பவம் அதனோடு சம்பந்தப் பட்டவர்களாலும், காவல் துறை, ஊடகம், பொதுமக்கள் ஆகியோராலும் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் காட்டி யிருக்கிறார் இயக்குநர். பார்வையாளர் களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் 
இச்சம்பவங்களையொட்டிப் பல தரப்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு வரின் கோணமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

எல்லாருடைய பின்னணிகளும் முறையான பிரதிநிதித் துவம் பெறு கின்றன. அசம்பாவிதம் நிகழக் காரணமான ஆசிரியையின் உணர்வு, பள்ளி நிர்வாகத்தின் அணுகுமுறை, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய்மாமனின் கோபம், அம்மாவின் கையறு நிலை, என எல்லாமே அடர்த்தியானவை.
காட்சிகளால் கதை சொல்லும் கலை பிரம்மாவுக்குக் கைகூடியிருக்கிறது. பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் ஆசி ரியையின் கால் செருப்பில் ஒரு பிளாஸ்டிக் உறை ஒட்டிக்கொள்கிறது. அது தெரியா மல் அவர் நெடுந் தூரம் நடந்து வருவது அவரது பதற்றம் அவரை எந்த அள வுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டி விடுகிறது.

24 மணிநேரத்தில் நடக்கும் சம்பவங் களினூடே வேகமாக நகர்கிறது படம். வேகமான திரைக்கதை என்றாலும் பல்வேறு நுட்பங்களையும் தவறவிடாமல் பதிவுசெய்திருப்பது சிறப்பு. மனிதன் என்னதான் சூழ்நிலைக் கைதியானாலும், எல்லாருமே பதற்றத்தில் மனித நேயத் தைத் தொலைத்துவிட மாட்டார்கள் என் னும் உண்மையையும் படம் காட்டு கிறது. கோபத்தின் உச்சியில் இருக்கும் தாய்மாமன் பள்ளியின் முதல்வரைச் சொற்களால் வறுத்தெடுக்கிறார். அதற் குப் பதிலாக முதல்வரின் மனைவி சொல்லும் சில வார்த்தைகள் அவர் மனதைத் தொடுகின்றன. நாங்க விட்ற மாட்டோம் தம்பிஎன்று அந்த அம்மையார் மெய்யான உணர்வுடன் சொல்லும்போது தாய்மாமனின் மனம் நெகிழ்வதை உணர முடிகிறது. பாதிக்கப்பட்ட அன்னையை ஆசிரியை சந்திக்கும் இடம் அற்புதமான கவிதை. மனித இயல்பின் மகத்தான பரிமாணத்தை அழகாகக் காட்டும் காட்சிகள் இவை.

சிறுவனின் தாய்மாமன் பொது வுடமைச் சித்தாந்தம் பேசும் தோழராக வருவது யதார்த்தம். ஆனால் அரசியல் கோட்பாடு பேசப்படும் இடங்கள் இயல்பாக இல்லை. ஆசிரியையின் கிறிஸ்துவத் தாயார் தன் மகள் ஒரு இந்துவைத் திருமணம் செய்துகொண்டது குறித்துக் காட்டும் வெறுப்பும் நம்பும்படி இல்லை. பள்ளிக்கூடக் காட்சிகளும் பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியின் காலைநேரக் காட்சிகளும் இயல்பாக இருக்கின்றன.

பாலியல் கல்வி குறித்த விவாதம் தேவைக்கதிகமாக நீள்வதைத் தவிர்த் திருக்கலாம். ஊடகங்களின் போக்கைச் சொல்லும் காட்சிகள் கூர்மையாக இருந்தாலும் திரைக்கதையில் கச்சித மாக ஒட்டவில்லை. சில காட்சிகள் துருத்திக்கொண்டிருக்கின்றன. குறிப் பாகப் பையனின் தாய்மாமனின் சமூக உணர்வைக் காட்டுவதற்கான காட்சிகள்.

நடிகர்கள் தேர்வு திரைக்கதையின் நம்பகத்தன்மைக்குப் பெரிதும் உதவி யிருக்கிறது. பாத்திரங்கள் நிஜ வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட எல்லாருமே புதுமுகங்கள். ஒவ்வொரு நடிகரையும் கதாபாத்திரமாகவே மாற வைத்திருப்பதில் இயக்குநரின் ஈடுபாடும் உழைப்பும் தெரிகின்றன. ராதிகா பிரசித்தா வின் நடிப்பு அபாரம். குற்றவுணர்வும் பீதியும் பதைபதைப்பும் அவர் முகத்தில் தத்ரூபமாகப் பிரதிபலிக்கின்றன. பல சமயம் அவர் கண்களே எல்லாவற்றையும் சொல்லி விடுகின்றன.

சங்கர் ரங்கராஜனின் இசையில் பாடல் கள் இனிமையாக உள்ளன. பின்னணி இசை திரைக்கதையின் ஆழத்தைக் கூட்டுகிறது. மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்துக்கு இயல்புத் தன்மையைத் தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியேபாடலைப் படமாக்கிய விதம் அற்புதம். கன்னத்தில் முத்தமிட்டால்என்னும் வரியைக் காட்சிப்படுத்திய விதமும், அடுத்த வரியைப் பாடாமல் இசையால் இடைவெளியை நிரப்பிய விதமும் படத்தின் அடிநாதத்துக்கு பொருத்தமாய் அமைந்து மனதை நெகிழச் செய்கின்றன.

சி.எஸ். பிரேமின் படத்தொகுப்பு அருமை. லாட்ஜுக்கு அருகே நடக்கும் கட்டைக் கூத்து கதாபாத்திரத்தின் நிலையைப் பிரதிபலிக்கிறது. ஆனால் இந்தப் பொருத்தத்தை நீட்டிமுழக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் எடிட்டர். கடைசிக் காட்சியில் தோழர் உதயன் ஊடகத்திடம் பேசுவார் என்று எதிர்பார்க்கிறபோது அவர் கேமராவைக் கையால் மறைத்துத் திரையில் கருப்பு வண்ணைத்தை படரவிடுவதோடு காட்சியை முடித்துக்கொள்கிறார் எடிட்டர். இப்படித்தான் பல காட்சிகளில் எடிட்டிங் கூர்மையாக இருக்கிறது.

ஒரு சம்பவத்தை முன்வைத்துச் சமூக யதார்த்தத்தையும் மனித இயல்பு களையும் அழுத்தமாகக் காட்டியிருக்கும் குற்றம் கடிதல்தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவு. மனித மனம், பழிவாங்க மட்டுமல்ல; மன்னிக்கவும் தயாராக இருக்கும் என்னும் உண்மையைக் கவித்துவமாகக் கூறும் ஆரோக்கியமான படம் இது.


விமர்சனம்: ஹிந்து 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில், வியாழக்கிழமை இரவு லாரி மீது மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழப்பு, லாரி ஓட்டுநர் கைது!!

No comments :
கீழக்கரை அருகே ஏர்வாடி கிழக்குக் கடற்கரைச் சாலையில், வியாழக்கிழமை இரவு லாரி மீது மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சேலம் வீரபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் (24). 

இவர், ராமநாதபுரம் நோக்கி காரை ஓட்டிச் சென்றுள்ளார். அந்தக் காரில் 14 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, ஏர்வாடி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள குடியிருப்பு அருகே லாரி மீது கார் மோதியது. இதில், கார் ஓட்டுநர் பிரதீப்குமார் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இதில் பலத்த காயமடைந்த பிரதீப்குமாரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.  

இது குறித்து, வாலிநோக்கம் மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்த கப்படையார் மகன் ரகுமத் அலி அளித்த புகாரின்பேரில், ஏர்வாடி காவல் ஆய்வாளர் பால்பாண்டி, சார்பு-ஆய்வாளர் ராஜன் ஆகியோர் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் காரைக்காலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சுவாமிநாதன் (47) என்பவரைக் கைது செய்து,  விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பனைக்குளத்தில் தங்கையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.35.70 லட்சம் திருடிய சகோதரர் தலைமறைவு!!

No comments :

பனைக்குளத்தில் தங்கையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 35.70 லட்சத்தை திருடிய அண்ணனை, போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே புதுவலசை கிராமத்தில் கிழக்குத் தெருவில் வசிப்பவர் இப்ராகிம் ஷா என்பவரின் மனைவி பாத்திமா ரிஸ்வானா செய்யது. இவரது மூத்த சகோதரர் நல்ல இப்ராஹிமும் அதே பகுதியில் வசித்து வருகிறார். 

பாத்திமா ரிஸ்வானா பனைக்குளத்தில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளார். இந்த வங்கிக் கணக்கிலிருந்து பாத்திமா ரிஸ்வானாவுக்கு தெரியாமல் ரூ.35 லட்சத்து 70 ஆயிரத்தை நல்ல இப்ராஹிம் கடந்த 3.1.2014 ஆம் தேதி எடுத்துள்ளார்.

இதையறிந்த ரிஸ்வானா, தனது சகோதரரிடம் பலமுறை அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டும் அவர் தரவில்லையாம். இதனால், ரிஸ்வானா ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் புகார் செய்தார்.

அவரது உத்தரவின்பேரில்,  ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். நல்ல இப்ராஹிம் தலைமறைவானதை அடுத்து, அவரைத் தேடி வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

தீபாவளியை முன்னிட்டு ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவிகித சிறப்புத் தள்ளுபடி விற்பனை!!

No comments :
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,  ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவிகித சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களில் 30 சதவிகித சிறப்புத் தள்ளுபடி வழங்கி வருகிறது.    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணங்களில், பலவித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டுச் சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் ஜீன்ஸ், டாப்ஸ், குர்தா வேட்டி, சேலைகள், சுடிதார் மற்றும் வெண்பட்டு சேலைகள் ஆகியன தீபாவளி பண்டிகைக்காக விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும், இயற்கையான ஆர்கானிக் புடவை ரகங்களும் வந்துள்ளன. பாரம்பரிய முறையில் கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்குடி சேலைகள் ஆகியனவும் விற்பனைக்கு உள்ளன.   தொடர்ந்து, ஆண்களுக்கு ஏற்ற லினன் சட்டைகள், பருத்தி சட்டைகள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வந்துள்ளன.   கடந்த ஆண்டு ரூ. 143.68 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. நடப்பு ஆண்டில் ரூ. 92 லட்சமும், அடுத்த ஆண்டில் ரூ. 1.73 கோடியும் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டுக்கான சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.


விழாவுக்கு, கோ-ஆப்டெக்ஸ் மதுரை மண்டல மேலாளர் ரஞ்சனி, முதுநிலை மேலாளர் கோ. அன்பழகன், நிர்வாகிகள் சண்முகசுந்தரம், டி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   ஏற்பாடுகளை, உதவி விற்பனையாளர் கே. பாண்டியம்மாள் செய்திருந்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரையில் சொந்த வீடு கேட்டு மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது வழக்கு!!

No comments :
கீழக்கரையில் சொந்த வீடு கேட்டு மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது, போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கீழக்கரை கஸ்டம்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது மகள் அப்ரோஸ் சஜானா (25). இவருக்கும், கீழக்கரையைச் சேர்ந்த ரிபாக் அகமது என்பவருக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள், தற்போது ராமநாதபுரம் விவேகானந்தர் தெருவில் வசித்து வருகிறார். திருமணமாகி 40 நாள்கள் மட்டுமே ஆன நிலையில், ரிபாக் அகமது வெளிநாடு சென்றுவிட்டாராம். அதன்பின்னர், மனைவியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். 

இது குறித்து கேட்டதற்கு, சேர்ந்து வாழ விரும்பினால் சொந்தமாக வீடு எழுதி வாங்கி வருமாறு ரிபாக் அகமது தெரிவித்தாராம்.

இதற்கு, அவரது தாய் சல்கத் சபிக்கா, இஸ்ரா அகமது மற்றும் உறவினர்கள் அம்சத் நிகியா, நூகு, சபர் பாத்திமா, லத்திபா, மக்சதீன் ஆகியோரும் உடந்தையாக இருந்தனராம். இதனால், மனம் உடைந்த அப்ரோஸ் சஜானா கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)