முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 7, 2015

தித்திக்கட்டும் தீபாவளி, காற்றை அசுத்தமாக்காமலும், விபத்தில்லாமலும் கொண்டாடுங்கள் - மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார்

No comments :
காற்றை அசுத்தமாக்காமலும்விபத்தில்லாமலும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 தீபாவளிப் பண்டிகையின் போது சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது என்பது காலம், காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகை தினங்களில் பாதுகாப்பு கருதி இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒலிமாசு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.


அதனடிப்படையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆண்டு தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் அறிவுரையைப் பின்பற்றி பட்டாசு குறித்து உற்பத்தியாளர்கள்,விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.

பட்டாசு விற்பனையாளர்கள் அதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள், அளவுகள், வெடிக்கும் பொழுது ஏற்படுத்தும் ஒலி மாசு அளவுகள் பற்றிய தகவல்களை அறிவிப்பு பலகையில் குறிக்க வேண்டும். அதிக பட்சமாக ஒலி அளவான 125 டெசிபல் மேல் ஏற்படுத்தும் எந்த ஒரு பட்டாசும் விற்பனை செய்யக்கூடாது. இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணிக்கு வரை பட்டாசுகளை வெடிக்க கூடாது. இதனை முழுமையாக அமல்படுத்துமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீபாவளி என்பது ஒவ்வொருவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத்திருவிழாவாகும். அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம்,நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் பாதுகாப்பாகவும், ஒலி மற்றும் காற்று அசுத்தமாகாத சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தீபாவளியினைக் கொண்டாடுங்கள் என ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)