முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 14, 2015

ராமநாதபுரத்தில் போலியாக ஆவணங்கள் தயாரித்து ரூ. 1 கோடி மதிப்புள்ள நில மோசடி!!

No comments :
ராமநாதபுரத்தில் போலியாக ஆவணங்கள் தயாரித்து ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக சார்-பதிவாளர், பத்திர எழுத்தர் உள்பட 8 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் அருகில் உள்ள 8 ஏக்கர் 63 சென்ட் நிலத்தை குமரன் சேதுபதி என்பவரிடமிருந்து ராமநாதபுரம் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த எம்.கே. முகம்மது அலி கடந்த 2008 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். இந்த சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும்.

இந்த சொத்தை ராமநாதபுரம் வீ. முனியாண்டி என்பவர் போலி ஆவணமும், போலியான வில்லங்க சான்றிதழும் தயாரித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூ. தங்கவேலுவுக்கு இனாம் செட்டில் மென்ட் மூலமாக கொடுத்துள்ளார்.  பின்னர் தங்கவேலு அந்த நிலத்தை ராமநாதபுரத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷூக்கும், சரவணனுக்கும் கிரையம் செய்து கொடுத்துள்ளார்.


இந்த சொத்தை விற்பதற்கு வெளிப்பட்டினத்தைச் சேர்ந்த சார்-பதிவாளர், பத்திர எழுத்தர் மற்றும் முனியாண்டி என்பவரது மகன்களான அன்பரசன், ஹரிதாஸ் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

சொத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றிருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து எம்.கே. முகம்மது அலி மாவட்ட நிலமோசடி தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் பாஸ்கரன் சார்-பதிவாளர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை, மக்கள் மகிழ்ச்சி!!

No comments :
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர் போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் அடைமழை பெய்து பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்த புயல் மழையால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையோ, அதனால் எந்த பாதிப்போ ஏற்படவில்லை. இந்தநிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதால் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட வானம் நேற்று அதிகாலை முதல் கருமேகங்கள் திரண்டு காட்சியளித்தது. இந்த கருமேகங்கள் காரணமாக மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே இடைவிடாது பரவலாக தூறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பலத்தமழையாக இல்லாவிட்டாலும் இடைவிடாமல் தூறலுடன் மழை பெய்துவருவதால் பருவநிலை மாறி காணப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:முதுகுளத்தூர்–2.6, பாம்பன்–8.2, பள்ளமோர்குளம்–9, மண்டபம்–11.5, ராமேசுவரம்–10.2, தங்கச்சிமடம்–7.4, கடலாடி–1 ஆக இருந்தது.

காலை நேரத்திற்கு பின்னரே மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இதன்படி நேற்று காலை முதல் மாலை வரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:

மண்டபம்–1.2,
பள்ளமோர்குளம்–8,
ராமேசுவரம்–7.4,
பாம்பன்–6.7,
ராமநாதபுரம்–22.2,
பரமக்குடி–4.4,
முதுகுளத்தூர்–2,
கடலாடி–18.1,
வாலிநோக்கம்–16.8,
தீர்த்தாண்டதானம்–5.2.

மாவட்டத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தி: தினத்தந்தி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)