முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 21, 2015

ஏமன் உள்நாட்டு போரின் குண்டு வீச்சில் சிக்கி ஏர்வாடியைச்சேர்ந்தவர் இறப்பு!!

No comments :
ஏமனில் நடந்த உள்நாட்டுப் போரின் போது குண்டு வீச்சு தாக்குதலில் சிக்கி ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் உள்பட பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏமன் நாட்டில் அரசு படைக்கும்ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படையினர் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போர் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். குண்டு வீச்சில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருவதால் அங்கிருந்து தாயகம் திரும்புமாறு மக்களை பல்வேறு நாடுகளும் வேண்டுகோள் விடுத்தன. 




இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏமன் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் ஏராளமானோர் தங்களது நாடுகளுக்குத் திரும்பினர். இந்தியாவைச் சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கில் அங்கிருந்து நாடு திரும்பினர்.

ஏமனில் அமைதியை ஏற்படுத்த ஐ.நா. சபை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிவடைந்து வருகிறது. இருப்பினும் இருதரப்பினரும் தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்தாலும் ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர்.

ஏமனின் முக்கிய பகுதிகளை முக்கியப் பகுதிகளை கிளர்ச்சிப்படையினர் பிடித்து வைத்துள்ளனர். இந்த பகுதியை மீட்க சவுதி கூட்டுப்படையினர் அவ்வப்போது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மோதல் வலுத்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக இருதரப்பினர் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஏமன் அருகே சவுதி அரேபியா பகுதியில் நடந்த சண்டையில் பொதுமக்கள் உள்பட 75க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

சவுதி அரேபியா எல்லையோர நகரமான நஜ்ரான் அருகே அல்காபில் என்ற பகுதியில் தங்கி இருந்து சமையல் வேலை செய்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த முகமது கில்மி (வயது 42) என்பவரும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவரும் இந்த தாக்குதலின்போது குண்டு வீச்சில் சிக்கி பலியானார்கள். 

நேற்று முன்தினம் மாலை நஜ்ரான் பகுதியில் வேலை முடிந்து திரும்பி வந்த கம்பெனி ஊழியர்களுக்கு தேநீர் தயாரித்து வழங்கிக் கொண்டிருந்த போது தான் குண்டுவீச்சில் சிக்கி முகமது கில்மி பலியானதாக கூறப்படுகிறது. 


இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது. முகமது கில்மி பலியானது குறித்து அவரது மனைவி பரக்கத் நிஷாவிடம் சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வரும் உறவினர்கள் தெரிவித்தனர். 

தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதும் நிவாரண உதவியும் வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பரக்கத் நிஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

குண்டு வீச்சில் பலியான முகம்மது கில்மிக்கு முகம்மது வாசிம் அக்ரம் (18) என்ற மகனும், அஸ்மத் (13) என்ற மகளும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முகமது கில்மி சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் முகம்மது கில்மி ஏர்வாடிக்கு வந்து குடும்பத்தினரை சந்தித்து விட்டு மீண்டும் சவுதி அரேபியாவுக்குச் சென்றார்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்!!

No comments :
ராமேஸ்வரத்தில் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த நபருக்கு உதவிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் தனபாலன் என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் மீது ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக பல்வேறு வழக்குகள் தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாக இருந்த இவரை கியூ பிரிவு போலீசார் தேடிவந்தனர். கடந்த வாரம் ராமநாதபுரம் கேணிக்கரை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் கஞ்சா கடத்தி வந்த செல்வக்குமார் போலீசாரிடம் சிக்கினார். அவரை கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.


அப்போது அவரது செல்போனை ஆய்வு செய்ததில், மண்டபம் இன்ஸ்பெக்டர் தனபாலன் எண் பதிவாகியிருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் தொடர்ந்து செல்வக்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், இன்ஸ்பெக்டர் தனபாலன் கியூ பிரிவினரின் தேடுதல் நடவடிக்கைகள் உட்பட போலீஸ்துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் செல்வக்குமார், அவரது கும்பலுக்கு தெரிவித்தது தெரியவந்தது. மேலும் இதற்காக செல்வக்குமாரிடம் மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை தனபால் மாமூலாக பெற்று வந்ததும் தெரிந்தது.


இதையடுத்து இன்ஸ்பெக்டர் தனபாலன் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி மணிவண்ணன், மதுரை டி.ஐ.ஜி ஆனந்த்குமார் சோமானிக்கு பரிந்துரைத்தார். இதனை ஏற்று அவர், அதிரடியாக தனபாலனை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

செய்தி: தினசரிகள்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)