(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 5, 2016

தேமுதிகவில் போர்க்கொடி தூக்கிய 10 நிர்வாகிகளும் கட்சியை விட்டு நீக்கம் - விஜயகாந்த்!!

No comments :
தேமுதிகவில் போர்க்கொடி தூக்கிய சந்திரகுமார் உள்பட 10 நிர்வாகிகளும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


நீக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், கழக துணைச்செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எச்.சேகர், சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜெ.விஸ்வநாதன்,திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், அவரவர் வகித்து வந்த கழகப் பதவியில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் இன்று (05.04.2016) முதல் நீக்கப்படுகிறார்.



இவர்களுடன் கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக ஏ.வி.ஆறுமுகம்(MC) (மாவட்ட கழக அவைத்தலைவர்), திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பாபு முருகவேல் எம்.எல்.ஏ, வேலூர் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக ஸ்ரீதர் (முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர்), சேலம் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பி.ஆனந்தபாபு (கழக மாணவரணி துணைச்செயலாளர்), ஈரோடு வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பி.கே.சுப்பிரமணி (கழக நெசவாளர் அணி செயலாளர்), ஈரோடு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பா.கோபால் (மாவட்ட கழக துணைச்செயலாளர்) ஆகியோர் இன்று (05.04.2016) முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு அந்தந்த மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை கழக, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து கழகம் சிறப்பான வளர்ச்சிபெற பாடுபடவேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலக வேண்டும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் தமது ஆதரவாளர்களுடன் பகிரங்கமாக வலியுறுத்தினார். திமுக கூட்டணியில் இணைவதால் மட்டுமே தேமுதிகவை காப்பாற்ற முடியும் என்றும், மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்தது தற்கொலை முடிவு என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக உரிய முடிவை எடுக்க ஒருநாள் கெடுவை அவர் நிர்ணயித்ததும் குறிப்பிடத்தக்கது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment