(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 29, 2016

50 நாட்கள் கடந்தும் சோகம் தீரவில்லை!!

No comments :

 

பிரதமர் கடந்த நவ.8ம் தேதி ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அந்த அறிவிப்பு வந்த நாள் முதல் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்து புதிய ரூபாய்களை பெற்று வருகின்றனர்.

இருப்பினும் வங்கிகளுக்கு போதிய அளவு புதிய ரூ.500, ரூ.ஆயிரம்  நோட்டுகள் வந்து சேராததாலும்ரூ.100, ரூ.50 நோட்டுக்கள் போதிய அளவில் இருப்பில் இல்லாததாலும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் வங்கிகள் தடுமாறி வருகின்றன. 

நாட்களில் இப்பிரச்னை சரியாகி விடும் என்று தெரிவித்த ரிசர்வு வங்கி தற்போது நாளுக்கு நாள் பணம் எடுக்க மற்றும் செலுத்த புதிய கட்டுப்பாடுகளை மட்டும் வெளியிட்டு வருகிறது. இதனால் கையில் செலவுக்கு வைத்திருந்த பணத்தையெல்லாம் வங்கியில் செலுத்தி விட்டு தற்போது அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.



வருகிற 30ம் தேதி வரையே பழைய 500, 1000 நோட்டுகளை மாற்ற முடியும் என்பதால் செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்கு ராமநாதபுரம் சாலை தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ஆண்கள், பெண்கள் என பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நேற்று காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நகரில் 50 நாட்களாகியும் ஏடிஎம்கள் முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரவில்லை.
 

ஒரு சில ஏடிஎம் மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அவற்றிலும் நிரப்பப்பட்ட பணம் உடன் தீர்ந்து போவதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். பிற இடங்களை காட்டிலும் வணிகம், கடைவீதிகள் அதிகமுள்ள வங்கி கிளைகளில் பொதுமக்கள், வணிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

வாடிக்கையாளர்கள் கூறுகையில், தனியார் வங்கிகளை காட்டிலும் அரசு வங்கிகளின் முன்புதான் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை கால்கடுக்க நின்றாலும் புதிய நோட்டுகளை போதிய அளவு பெற முடியாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. தேசிய வங்கிகளில், அரசு அறிவித்தவாறு வங்கி கணக்கில் முன்பு டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து ரூ.24 ஆயிரத்தை தர மறுக்கின்றனர்.
 ரூ.5 ஆயிரம் அல்லது ரூ.10 ஆயிரம் மட்டுமே தருகின்றனர்.

கருப்பு பணத்தை அடியோடு ஒழிப்பதற்காக மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறைந்து வருவதை கருத்தில் கொள்ள வேண்டும். வங்கிகளில் போதிய அளவு பணத்தை இருப்பு வைத்து அதிகளவில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment