முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, January 2, 2016

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை!!

No comments :
உணவகம், குளியலறை, ஏ.டி.எம். வசதி, பயணிகள் காத்திருக்கும் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள பழமை வாய்ந்த புனிதத்தலங்களுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ராமநாதபுரத்துக்கு ரயில்மூலம் வந்து செல்கின்றனர். ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தொழில் தொடர்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ராமநாதபுரத்தில் இருந்து ரயில்களில் சென்று திரும்புகின்றனர். ஆனால், இந்த ரயில்நிலையத்தில் ஏடிஎம்., உணவகம், குளியலறை, ஏ.டி.எம். வசதி, பயணிகள் காத்திருக்கும் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.



ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு வரும் பலரும் ரயில் நிலையத்திலேயே அவசரத் தேவைக்கு பணம் எடுக்க ஏ.டி.எம். வசதி இல்லாமல் இருப்பதால் ஏமாற்றமடைகின்றனர். குறிப்பாக பயணச்சீட்டு முன்பதிவு செய்ய விரும்புவோர் திடீரெனப் பணப் பற்றாக்குறை ஏற்படும் போது, அருகில் ஏ.டி.எம். எதுவும் இருக்கிறதா என தேடிப்பார்த்து ஏமாற்றமடைகின்றனர்.

ரயில் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு ஒரு கி.மீ. தூரம் நடந்து வந்தே ஏ.டி.எம்.-இல் பணம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

குறைவான விலையில் தரமான உணவை வழங்கி வந்த ரயில்நிலைய உணவகம் கடந்த 4 மாதங்களாக மூடியே கிடக்கிறது. பயணிகள் பலரும் பார்சல் வாங்கிக்கொண்டு ரயில்களில் ஏறிச்செல்ல வசதியாக இருந்து வந்த உணவகம் தற்போது இல்லை. அவசரமாக ரயில் நிலையத்துக்கு வந்து ரயிலில் பயணிக்க இருப்பவர்களும் உணவகம் இல்லாத இருப்பதை அறிந்து ஏமாற்றம் அடைகின்றனர்.

 ராமேசுவரம், ராமநாதபுரம் ஆகிய இரு ரயில் நிலையங்களிலும் எந்த அறிவிப்பும் இல்லாமல் மூடப்பட்ட உணவகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் குளியலறை வசதி இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். கட்டணக் கழிப்பறையிலும் பெரும்பாலான நேரங்களில் தண்ணீர் வருவதில்லை. கட்டணக் குளியலறை வசதியாவது அமைக்கப்பட வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
முக்கியப்பிரமுகர்கள் மற்றும் உயர்வகுப்பு பயணிகள் காத்திருப்புக் கூடம் மட்டும் ராமநாதபுரத்தில் உள்ளது. ஆனால் பயணிகள் காத்திருப்புக் கூடம் ராமநாதபுரத்தில் இல்லை. நள்ளிரவு நேரங்களில் ராமநாதபுரத்துக்கு ரயிலில் வந்து இறங்குபவர்கள் நடைபாதைகளில் படுத்துறங்கும் அவலமே உள்ளது. இதனால் பயணிகளின் உடமைகள் திருடுபோகும் நிலையும் அடிக்கடி நடக்கிறது.

எனவே கழிப்பறை மற்றும் குளியலறை வசதியுடன் பயணிகள் காத்திருப்புக் கூட வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரையில் புகாரி ஷரீப் முதலாம் ஆண்டு நிறைவு விழா!!

No comments :
கீழக்கரை நடுத்தெரு ஜூம்மா பள்ளிவாசல் வளாகத்தில் புகாரி ஷரீப் முதலாம் ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை அனைத்து மசூதி மற்றும் பெண்கள் மசூதிகளிலும் 7ஆயிரத்து 275 ஹதீஸ் தொகுப்புகளை உள்ளடக்கிய புகாரி ஷரீபை தினமும் நடைபெறும் 5 வேளை தொழுகைக்கு பிறகும் ஆலிம்களை கொண்டு பொது மக்களுக்கு விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை நடுத்தெரு ஜூம்மா மசூதியில் சிறப்பு பேச்சாளர்களான, மேலப்பாளையம் உதுமானியா, அரபிக் கல்லூரி பேராசிரியர் ஹாஜா முகைதீன் மற்றும் முஅஸ்கர் ரஹ்மான் மகளிர் கல்லூரி கவுரவ ஆலோசகர் ஹபீபுர்ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


இவ்விழாவில், அனைத்து ஜமாத் நிர்வாகிகளும் மசூதிகளின் ஆலிம்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கீழக்கரை புகாரி செரிப் அறக்கட்டளை, அனைத்து ஜமாத் கூட்டமைப்பு செய்திருந்தது.

செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)