முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 20, 2016

புகழ் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிப்பு: ஜெய், சுரபி, மாரிமுத்து, கருணாஸ், பாலாஜி
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
இசை: விவேக் சிவா
தயாரிப்பு: வருண் மணியன், சுசாந்த் பிரசாத், கோவிந்தராஜ்
இயக்கம்: மணிமாறன்

நில அபகரிப்பு அரசியல் ரவுடித்தனத்தை மையமாக வைத்து வந்திருக்கும் இன்னுமொரு படம் புகழ். வாலாஜா நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை ஆட்டயப் போடப் பார்க்கிறது கல்வி அமைச்சர் மற்றும் அவரது அடியாட்கள் கும்பல். அதை எதிர்த்துப் போராடும் ஜெய் மற்றும் நண்பர்கள் எப்படி அந்த மைதானத்தை மீட்டெடுக்கிறார்கள் என்பதுதான் படம். புகழ் என்பது ஹீரோவின் பெயர். அவ்வளவுதான்.

வழக்கமாக மதுரை, மாட்டுத் தாவணி, தேனி, திருநெல்வேலி என்றே பார்த்துப் பழகிய கண்களுக்கு, வேலூர், திருத்தணி, வாலாஜா, சித்தூர் என வடமாவட்டப் பின்னணியில் படம் பார்ப்பது சற்றே மாறுதலாகத்தான் இருந்தது. கதை நிகழுமிடம், பின்னணி, கேரக்டர்கள் எல்லாம் ஓகேதான் என்றாலும் திரைக்கதை அரதப் பழசு. ஹீரோ அடுத்து இதைத்தான் செய்யப் போகிறார், வில்லன் அதற்கு பதில் இப்படித்தான் பழிவாங்கப் போகிறார் என எல்லாமே யூகித்துவிட முடிகிறது.



நாயகி அறிமுகமாகும்போதே இவர்களுக்குள் எந்த கட்டத்தில் காதல் வரும் என்பதைக் கூட சுலபமாகச் சொல்கிறது பக்கத்து இருக்கை. ஆறுதலான விஷயம்... நட்புத் துரோகம் இல்லாதது. புகழாக ஜெய். இதற்கு மேல் அவரிடம் பெஸ்ட் நடிப்பை எதிர்ப்பார்க்க முடியாது.

குரலில் பழைய அளவுக்கு பிசிறடிக்காதது ஒரு ப்ளஸ். ஆக்ஷன் காட்சிகளில் நன்றாகத்தான் நடித்திருக்கிறார். ஆனாலும் இந்த அளவு ஓவர் ஹீரோயிஸம் வேண்டாமே ஜெய்! சுரபி சில காட்சிகளில் குத்துவிளக்காக ஜொலிக்கிறார். சில காட்சிகளில் இயல்பாகவும் நடித்திருக்கிறார். ஒரு மழை இரவில் இருவரும் டீ குடித்தபடியே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் காட்சியில் அழகான காதல் எட்டிப் பார்க்கிறது. மாரிமுத்து கலக்கியிருக்கிறார். அப்படியே அச்சு அசலாக ஒரு நகராட்சி சேர்மனைப் பார்க்க முடிந்தது அவரது நடிப்பில். மோட்டார் சைக்கிள் கேட்கும் மகனுக்கு அவர் தரும் பதில் பக்கா எதார்த்தம். கருணாஸ் நிறைவான நடிப்பு.


அடங்கி அடங்கிப் போகும் அவர் கடைசியில் வெடித்து எங்க வெட்றா பாக்கலாம்... என சீறும் காட்சி அருமை. பாலாஜியும் அவரது நண்பர்களும் கலகலப்பு பஞ்சத்தைப் போக்க உதவியிருக்கிறார்கள். வேல்ராஜின் ஒளிப்பதிவு வெகு இயல்பு. ஆனால் அந்த அளவுக்கு சொல்லும்படி இல்லை விவேக் சிவாவின் இசை. புத்திசாலித்தனமான திரைக்கதை மட்டும் அமைந்திருந்தால் புகழ், பெயருக்கேற்ப புகழ் சேர்த்திருக்கும்.

விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் SDPI !!

No comments :

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சென்னையில் இன்று சந்தித்து பேசுவார்த்தை நடத்திய பின் மமக தலைரான ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்தார். 

ஜவாஹிருல்லா தலைமையில் செயல்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடந்த 2009-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சியானது. அப்போது நடந்த லோக்சபா தேர்தலில் மமக தனித்து போட்டியிட்டது. 


திமுகவுடன் கூட்டணி 


ஆனால் பின்னர் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிதிமுகவின் கனிமொழிக்கு ஆதரவாக வாக்களித்தது. 2014-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணியில் நீடித்தது. அக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் தோல்வியை தழுவியது. 




மக்கள் நலக் கூட்டியக்கத்தில் 


தேர்தலுக்கு பிறகு திமுகவுடன் கூட்டணி இல்லை என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்தது. அத்துடன் வைகோ, திருமாவளவன், இடதுசாரிகள் உருவாக்கிய மக்கள் நலக்கூட்டு இயக்கத்தில் மமக இணைந்து செயல்பட்டு வந்தது. பின்னர் மக்கள் நலக் கூட்டணியாக அந்த இயக்கம் மாற்றப்பட்டதும் அதில் இருந்து மமக வெளியேறியது. 

அதனைத் தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவான நிலையில் மமக இருந்து வந்தது. இதனிடையே ஜவாஹிருல்லாவுக்கும், பொதுச்செயலாளராக இருந்த தமீமுன் அன்சாரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தமீமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயகக் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கினார். இந்த கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் எனக் கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. கடந்த ஞாயிறன்று அதிமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஜெயலலிதா சந்தித்து பேசினார். அப்போது ஜவாஹிருல்லாவுக்கும் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் போயஸ் தோட்டம் செல்லவில்லை. 

திமுக-மமக கூட்டணி 


இந்நிலையில் புதிய திருப்பமாக திமுக கூட்டணியில் இணைய மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று திமுக பொருளாளர் முக ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஜவாஹிருல்லா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். 

முஸ்லிம் கட்சிகள் 



வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெஹலான் பாகவி, திமுகவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை பின்னர் தொடங்கும் என தெரிவித்தார். 



திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி, மனித நேய மக்கள் கட்சியைத் தொடர்ந்து தற்போது எஸ்டிபிஐ கட்சியும் இணைந்துள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)