முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 31, 2016

வேலையில்லா இளைஞர்கள் சுயதொழில் துவங்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் நடராஜன்!!

No comments :
படித்த வேலையில்லா இளைஞர்கள் சுயதொழில் துவங்க விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கவும், அதன் மூலம் பலருக்கு வேலை வழங்கவும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இதில் உற்பத்தி தொடர்பான தொழில் துவங்க அதிகபட்சம் ரூ.5 லட்சம்,
சேவை தொடர்பான தொழில் துவங்க ரூ.3 லட்சம்,
வியாபாரம் துவங்க ரூ.1 லட்சம் வங்கி கடன் வழங்கப்படுகிறது.


இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும்,18 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 வயதாகும். சிறப்பு பிரிவினரான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்., பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் 45 வயதுவரை விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் கடன் பெற ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் இலவசமாக வழங்கப்படும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் இரண்டு நகல்களை மாவட்ட தொழில் மையத்தில் ஒப்படைக்க வேண்டும். தகுதி அடிப்படையில் வங்கி கடன் பெற பரிந்துரை செய்யப்படும்.

திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும். கடன் அனுமதி பெற்றவுடன் ஒருவாரம் கட்டாயம் மேலாண்மை பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்கு பின் திட்ட முதலீட்டில் 10 சதவீத தொகையினை தனது பங்கு மூலதனமாக வங்கியில் செலுத்த வேண்டும்.


மீதம் உள்ள 90 சதவீத தொகை கடனுதவியாக பெறலாம். சிறப்பு பிரிவினர் 5 சதவீத தொகை முதலீடு செய்ய வேண்டும். தொழில் ஆர்வமுள்ள இளைஞர்கள் உரிய சான்றுகளுடன் மாவட்ட தொழில் மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேஸ்வரம் - மதுரை ரயிலில் கூடுதல் பெட்டிகள்!!

No comments :
ராமேசுவரத்திலிருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. பயணிகளும், குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் செந்தில்குமார், மதுரை சந்திப்பு ரயில் நிலைய மேலாளர் பிரகாசம் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டேன்.



எனது கோரிக்கையினை ஏற்று ராமேசுவரத்திலிருந்து காலை 5.30க்கு மதுரைக்கு புறப்படும்பயணிகள் ரயிலிலும், மதுரையிலிருந்து மாலை 6.05 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் பயணிகள் ரயிலிலும் வியாழக்கிழமை முதல் கூடுதலாக ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

  
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)