முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 18, 2016

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்ததாக 87 பேர் கைது!!

No comments :

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் திருச்சியிலிருந்து ராமேசுவரம் செல்லும் ரயிலை மறித்ததாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 7 பெண்கள் உள்பட 87 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டிப்பது, தமிழகத்தில் சம்பா சாகுபடியை காப்பாற்ற தேவையான நீரை காவிரியில் திறந்து விட வலியுறுத்துவது,காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவை உடனே அமைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் ரயில் மறியல் நடைபெற்றது.



இம்மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எம்.முத்துராமு(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), மாவட்ட துணைச் செயலாளர் கே.குருசாமி(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் தலைமை வகித்தனர்.

மதிமுக மாவட்டச் செயலர் கே.எம்.குணா, மாவட்ட இளைஞரணிச் செயலர் அரு.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் என்.கே.ராஜன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் மாலின் உள்ளிட்டோர் திருச்சியிலிருந்து ராமேசுவரம் செல்லும் ரயிலை ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் மறிக்க முயன்றதாக 7 பெண்கள் உள்பட மொத்தம் 87 பேர் கைது செய்யப்பட்டனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)