முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 1, 2016

ராமநாதபுரம் நகர் பகுதியில் இரவு 11 மணி வரை டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் நகர் பகுதியில் இரவு 11 மணி வரை டவுன் பஸ்கள் இயக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் நகர் பகுதி என்பது தற்போது பட்டணம்காத்தான் செக்போஸ்ட் வரை விரிவடைந்துள்ளது.

நகராட்சி பகுதியை தவிர்த்து சுமார் 7 கி.மீ., வரையிலான சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதிகள் நகர் பகுதியில் அமைந்துள்ளன.

இப்பகுதிகளுக்கு சென்று வர சரியான பஸ் வசதிகள் செய்யப்படவில்லை. பகலில் அரண்மனை - கலெக்டர் அலுவலகத்திற்கு மினி பஸ், அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.


ஆனால், நகர் பகுதியில் வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் நகரை ஒட்டி அமைந்துள்ள பாரதிநகர், பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் வசிக்கின்றனர்.
இவர்கள் பணி முடிந்து, இரவு 9:30 மணிக்குள் பஸ்ஸ்டாண்ட் சென்றால்தான் ஊருக்கு செல்ல முடியும். காரணம் பட்டணம்காத்தான் வழியே பெரியபட்டினம் செல்லும் கடைசி பஸ் இரவு 9:30 மணிக்கு செல்கிறது. அதன் பிறகு பஸ் இல்லை.

கடைகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்களை இரவு 9 மணிக்குள் மூடுவது சாத்தியமற்றது. மேலும்,
இந்த கடைசி பஸ் பல நேரங்களில் 10 நிமிடம் முன்கூட்டியே புறப்பட்டு செல்வதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, அரசு போக்குவரத்து கழகம் இரவு 11 மணி வரையிலாவது பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சந்திப்பு வரை டவுன் பஸ்களை இயக்க வேண்டும்.

இதுகுறித்து, ராமநாதபுரம் போக்குவரத்துக்கழக நகர் டவுன் பஸ் மேலாளர் தெய்வேந்திரனிடம் கேட்டபோது, ராமநாதபுரம் கிளை மேலாளருடன் பேசிவருவதாக தெரிவித்தார்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

9–ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10–ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.100–ம்,
10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150–ம்,
பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200–ம்,
பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.300வீதமும்
3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்ததிட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.


மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000 மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். 10–ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600 வீதமும் பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750 வீதமும், பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதமும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறக்கூடாது.

இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.

இந்த தகவலை கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)