முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 22, 2016

கீழக்கரையில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து இறப்பு!!

No comments :
கீழக்கரை வங்கி முன்பு நீண்ட வரிசையில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.


மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தங்கள் சொந்தப்பணத்தை எடுப்பதற்கே, வங்கிகளின் வாசலிலும், மூடியே கிடக்கும் ஏ.டி.எம். மையங்களிலும் தவம் கிடக்கிறார்கள்.

50 நாளில் பிரச்சினை தீரும் என்று மத்திய அரசு சமாதானம் சொன்னாலும், நேற்றோடு 43 நாட்கள் கடந்தும் நிலைமை சீரடைய வில்லை. மாறாக நாளுக்கு நாள் பணத்தட்டுப்பாடு அதிகரித்து மக்களின் துயரம் கூடிக்கொண்டே போகிறது.

தினமும் காலை விடிந்ததும் வங்கிகளை நோக்கி ஓடுவதே மக்களின் பிழைப்பாகி விட்டது. அங்கு வரிசையில் நின்று பணம் எடுக்கும்போதும், காத்திருக்கும்போதும் மனஉளைச்சலாலும், உடல் உபாதைகளாலும் ஏராளமானோர் இறந்து வருகின்றனர்.



நேற்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வங்கியில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து பலியான சோக சம்பவம் நடந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்தவர் முகமது நைனார். இருடைய மகன் சித்திக்அலி(வயது 67). இவர் நேற்று காலை கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் எடுப்பதற்காக வந்தார். நீண்ட வரிசையை பார்த்தவுடன் சித்திக்அலிக்கு இதில் கடந்து சென்று எப்போது பணம் எடுக்கப் போகிறோம் என்ற கவலை ஏற்பட்டது.

இருப்பினும் பணம் எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் வேறு வழியின்றி வரிசையில் நின்றார். சிறிதுநேரத்தில் சித்திக்அலிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அதையும் சமாளித்து நின்ற அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அருகில் இருந்தவர்கள் பதற்றமடைந்து அவருக்கு தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர்.

ஆனால், அவருடைய உடலில் எந்த அசைவும் இல்லை. எனவே அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சித்திக்அலி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதபடி அவருடைய உடலை பெற்றுச்சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் வைக்கப்படுவதே இல்லை. ஒரு சில வங்கிகள் மட்டும் தங்களின் தலைமை அலுவலக வளாக வாசலில் உள்ள மையத்தில் பணம் வைக்கின்றன. இதர இடங்களில் உள்ள மையங்களில் ஒருநாள் கூட பணம் வைப்பதில்லை.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கூட ஓரிரு நாட்கள் பணம் வைக்கின்றன. ஆனால் தனியார் வங்கிகள் தங்களின் எந்த ஏ.டி.எம். மையங்களிலும் பணம் வைக்கவே இல்லை. வங்கியில் சென்று பணம் கேட்டாலும் பணம் வரவில்லை என்று பதில் அளிக்கின்றனர்.
மதுரையில் ஒப்பாரி
மதுரையில் ஒன்றிரண்டு ஏ.டி.எம். மையங்களில் மட்டுமே பணம் வைக்கப்படுகிறது. அதுவும் சீக்கிரம் தீர்ந்து விடுகிறது.
இதனால் ஏ.டி.எம். மையங்களின் மீது மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

மதுரை ஞானஒளிவுபுரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இவை மூடியே கிடக்கின்றன. இதனால் கோபம் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று அவற்றின் முன் மவுன அஞ்சலி போராட்டம் நடத்தினர். ஏ.டி.எம். மையங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பெண்கள் அங்கு உட்கார்ந்து ஒப்பாரி வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

காலாவதியான விசா வழங்கி 7 பேரிடம் மோசடி, டிராவல்ஸ் உரிமையாளர் கைது!!

No comments :

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக்கூறி 7 பேரிடம் ரூ.3.35 லட்சம் முறைகேடு செய்ததாக டிராவல்ஸ் உரிமையாளரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.  

 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி.பட்டினம் சொலகான் பேட்டை பகுதியை சேர்ந்த வேலுவின் மகன் மோகன்ராஜ் (39). இவர் வெளிநாடுகளுக்கு ஆள் அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.  இவரிடம் தேனி மாவட்டம் கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் வசிக்கும் பாத்திமா டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரான அபுபக்கர் மகன் அகமது என்பவர் உள்பட அப்பகுதியை சேர்ந்த 7 பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்காக ரூ.3.35 லட்சம் கொடுத்தனராம்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட மோகன்ராஜ் 7 பேருக்கும் காலாவதியான விசாவைக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.  

இது குறித்து ராமநாதபுரம்  காவல் கண்காணிப்பாளர் ந.மணிவண்ணனிடம் அகமது கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை தேடி வந்தனர்.

இந்நிலையில், மோகன்ராஜ் அறந்தாங்கியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸார் அங்கு சென்று கைது செய்தனர்.   விசாரணையில், மோகன்ராஜ் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி 87 பேரிடம் மொத்தம் ரூ.49 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)