(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 25, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியினால் 100 சதவீதம் விவசாயம் பாதிப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியினால் 100 சதவீதம் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய குழு உறுப்பினர் ஆர்.அழகேசன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், 1 லட்சத்து 22 ஆயிரத்து 32 ஹெக்டேரில் நெல், 15 ஆயிரத்து 22 ஹெக்டேரில் மிளகாய் உள்பட 1 லட்சத்து 53 ஆயிரத்து 397 ஹெக்டேரில் பல வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது.

இவை அனைத்தும் பருவமழை பொய்த்ததால் காய்ந்து கருகியது. விவசாயம் முழுமையாக முடங்கியது. மாவட்டம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.



இந்நிலையில் வறட்சி பாதிப்புகளை நேரில் பார்வையிட 10 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. இவர்களில், மத்திய நீர்வளத்துறை இயக்குனர் ஆர்.அழகேசன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலர் எஸ்.பி.திவாரி ஆகியோர் அடங்கிய இருவர் குழு நேற்று ராமநாதபுரம் வந்தனர்.

கடலாடி தாலுகாவில், சோளம், கம்பு, சிறுதானிய சாகுபடி பாதிப்புகளையும், கடுகுசந்தை பகுதியில் நிலக்கடலை கருகியதையும், கீழசெல்வனுõர், கீழகிடாரம், திருப்புல்லாணி நல்லாங்குடி பகுதிகளில் நெற்பயிர் பாதிப்பையும், பனையடியேந்தல் பகுதியில் மிளகாய் சாகுபடி பாதிப்பையும் நேரில் பார்வையிட்டனர்.

விவசாய பாதிப்பு குறித்து மத்திய நீர்வளத்துறை இயக்குனர் அழகேசன் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் 100 சதவீதம் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். தமிழகத்தில் வறட்சியை பார்வையிட 10 பேர் கொண்ட மத்திய குழு வந்துள்ளது. தலா மூன்று பேர் கொண்ட இரண்டு குழுக்கள், 2 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் என, நான்கு குழுக்களாக பார்வையிடுகிறோம்.

நாங்கள் இருவரும், ராமநாதபுரம், சிவகங்கை, துõத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வறட்சி பகுதிகளை பார்வையிடுகிறோம். இதற்கான அறிக்கையை இரண்டு நாட்களில் 10 பேர் கொண்ட எங்கள் குழு தலைவரிடம் ஒப்படைப்போம்.

வறட்சியால் தாங்கள் பாதிக்கப்பட்டதையும், வேறு வாழ்வாதாரம் இல்லாததையும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். பிழைப்புக்காக வேறு மாநிலங்களை தேடிச்செல்லும் நிலை உள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குழு தலைமைக்கு விரிவாக அறிக்கை தருவோம். விவசாயிகளுக்கு முழு உதவியும் கிடைக்கும், என்றார்.மத்திய குழுவினருடன் விவசாயத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

வறட்சி பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினரை, டி.வி., சேனல் வீடியோகிராபர்கள், பத்திரிகை போட்டோ கிராப்பர்கள் படம் பிடித்தனர். இதை பார்த்த, மத்திய நீர்வளத்துறை இயக்குனர் அழகேசன், எங்களை போட்டோ எடுக்காதீர்கள். பயிர் பாதிப்புகளை எடுத்து, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் தெரியும் படி செய்தி வெளியிடுங்கள், அப்போதுதான் விவசாயிகளின் நிலை எல்லோருக்கும் தெரியும், என்றார்.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment