முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 28, 2017

ராமநாதபுரம் நகருக்குள் பகல் வேளையில் சரக்கு வாகனங்கள் நுழைய மார்ச் 1ம் தேதி முதல் தடை!!

No comments :
சரக்கு வாகனங்கள் ராமநாதபுரம் நகருக்குள் பகல் வேளையில் நாளை (மார்ச் 1) முதல் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் பழைய, புதிய, அரசு மருத்துவமனை ரோடு, சாலை தெரு, அக்ரஹாரம் ரோடு, அரண்மனை, மணிக்கூண்டு, சிகில்ராஜ வீதி, வண்டிக்காரத்தெரு, கேணிக்கரை சந்திப்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

இதனால் காலை வேளையில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் கடைகள் முன் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு சாமான்கள் இறக்கப்படுவதால் இடையூறுகள் ஏற்படுகிறது.




வண்டிக்காரத் தெருவில் நகராட்சி, தாலுகா, பத்திரப்பதிவு அலுவலகங்கள், வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளன. இப்பகுதியில் காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இத்தகைய சிரமங்களை தவிர்க்க பல மாதங்களுக்கு முன் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது.

இதனால் தொலைதுார அரசு பஸ்கள், கனரக வாகனங்கள் வண்டிக்கார தெரு வழியாக சென்றதால் உயர் மின் கம்பிகளில் உரசி விபத்து அபாயம் ஏற்பட்டது. மேலும் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒரு வழிப்பாதை திட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியது. இதையடுத்து இத்திட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

நகருக்குள் நுழையும் சரக்கு வாகனங்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க மாற்றுத்திட்டம் அமல்படுத்த எஸ்.பி., மணிவண்ணன் அறிவுறுத்தினார். இது தொடர்பாக உதவி எஸ்.பி., சர்வேஸ்ராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றம் போலீசாரிடம் ஆலோசனை நடத்தினர்.

இதன்படி ராமநாதபுரம் நகருக்குள் சரக்கு வாகனங்கள் நாளை (மார்ச் 1) முதல் பகலில் நுழைய தடை விதிப்பது, மதியம் 2: 00மணி முதல் மாலை 4:00 மணி வரை வந்து செல்ல அனுமதிப்பது, தடையை மீறும் சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)