முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 1, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை எரிவாயு எடுக்க ஆய்வு பணிகள் தீவிரம், போராட்டத்தில் இறங்க தயாராகும் மக்கள்!!

No comments :
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஹைட்ரோகார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் இந்த திட்டத்தின் கீழ் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு ஆய்வு பணிகள் முடிவடைந்துள்ளதால் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டு போராட்ட களமாக மாறி உள்ளது. இந்த போராட்டம் அந்த பகுதி மக்களின் போராட்டமாக மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழக நலன் சார்ந்த போராட்டமாக உருவெடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் தொடர் போராட்டங்களை அறிவித்து கோரிக்கைகளுக்காக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக இணைந்து போராடி வரும் நிலையில் வறண்ட மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்திலும் 22 இடங்களில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதற்கட்ட ஆய்வில் ஹைட்ரோகார்பன் இருக்கும் இடங்களாக கண்டறியப்பட்டு முழுமையான ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ள 22 இடங்களின் சர்வே எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரகசியமாக இந்த ஆய்வு பணிகள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, பெரியபட்டிணம், ரெகுநாதபுரம், உத்தரகோசமங்கை அருகே உள்ள பனைக்குளம், களரி, புல்லந்தை, புத்தேந்தல், உத்தரகோசமங்கை, அச்சடிபிரம்பு, பட்டணம்காத்தான், பழங்குளம், சித்தார்கோட்டை, தேவிபட்டிணம், பெருவயல், அத்தியூத்து, ஆற்றாங்கரை, கீழநாகாச்சி, பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை உள்பட 22 இடங்களில் இயற்கை எரிவாயு ஆய்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஆய்வு பணிகள் தொடங்கி ஏறத்தாழ முடிவடையும் தருவாயில் உள்ளன. ஆய்வு பணியின் போது போதிய விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்களிடையே எந்த எதிர்ப்பும் ஏற்படவில்லை. நெடுவாசல் போராட்டத்தினை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஆய்வு நடந்து வரும் இடங்களுக்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே நிலத்தடி நீரின்றி வறண்டு போய் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி இருக்கும் இந்த மாவட்டத்தில் இயற்கை எரிவாயு ஆய்வு திட்டத்தினால் பூமிக்கடியில் இருக்கும் நிலத்தடி நீரை முழுமையாக அகற்றி விடுவதோடு, நீரடுக்கு சுழற்சி ஓட்டங்களை சிதறடித்து தண்ணீரே இல்லாத பகுதியாக மாற்றிவிடும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளதாக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இயற்கை எரிவாயு திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை எரிவாயு திட்டத்துக்காக ஆய்வு நடைபெற்று வரும் பகுதிக்கு அருகே உள்ள கிராமங்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் நேரில் சென்று மக்களை சந்தித்து விளக்கி கூறி வருகின்றனர். இதன்காரணமாக மக்களிடம் எழுச்சி ஏற்பட்டு இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராக ராமநாதபுரம் மாவட்ட மக்களும் போராட தயாராகி வருகின்றனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் தமீம்ராசா கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை எரிவாயு திட்டத்துக்காக ஆய்வு நடத்த தகுதியான இடங்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட ஆய்வு பணியை மேற்கொண்டு வரும் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் ஆய்வு செய்யும் முன்பு, நிலத்தடி நீருக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை மத்திய அரசு வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்து அந்த அறிக்கையை வெளிப்படையாக வெளியிடுவதோடு, மக்களின் கருத்துகளை கேட்டறிந்து அதற்கு மதிப்பளித்து இந்த ஆய்வு பணிகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கு, விஏஓ உதவியாளருக்கு ஓராண்டு சிறை!!

No comments :
பள்ளி மாணவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.600 லஞ்சம் வாங்கி வழக்கில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் நைனாமுகம்மது. இவர் தனது மகன்கள் இருவருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கோரி கிராம நிர்வாக அலுவலர் பழனியிடம் 25.2.2004-இல் விண்ணப்பித்தார். சான்றிதழ் வழங்க, பழனி மற்றும் கிராம உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் ரூ.600 லஞ்சம் கேட்டுள்ளனர்.

இதையடுத்து, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் நைனாமுகம்மது தகவல் தெரிவித்தார். ரசாயனம் தடவிய ரூ.600 பணத்தை பழனியிடம் கொடுக்குமாறு நைனாமுகம்மதுவிடம் போலீஸார் கொடுத்தனுப்பினர். அவர் பழனி, ராஜேந்திரன் இருவரிடமும் பணத்தைக் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஜெயராஜ் லஞ்சம் வாங்கி பழனி, ராஜேந்திரன் இருவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சீனிவாசன் ஆஜரானார். பழனி, ராஜேந்திரன் இருவரும் பணி நிறைவு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பெல் நிறுவனத்தில் 14 துணை பொறியாளர், விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 8 !!

No comments :
பிரபல பெல் (பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) நிறுவனத்தில் துணை பொறியாளர் (டெப்டி மேனேஜர்) பணிக்கு இந்தியா முழுவதும் 14 காலி இடங்கள் நிரபப்பபட விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலியிடங்கங் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான எழுத்துத் தேர்வு 26 மார்ச் 2017ம் தேதி அன்று நடைபெறும்.

விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி : துணை பொறியாளர் (டெப்டி மேனேஜர்)
கல்வித் தகுதி : பி.இ / பி.டெக்
மொத்த காலியிடங்கள் : 14
வேலை இடம் : இந்தியா முழுவதும்
வயது வரம்பு (01.01.2017 தேதிக்குள்) : 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
சம்பள விகிதம் : Rs. 16,400 - Rs. 40,500 / மாதம்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : மார்ச் 8 2017
கல்வித்தகுதி - பி.இ, பி.டெக், பி.எஸ்.சி எஞ்னியரிங் ஏஎம்ஐஇ, ஏஐசிடிஇ
ஒப்புத்ல் பெற்ற கல்லூரிகளில் கல்வி கற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



பொதுப் பட்டியல் மற்றும் ஓபிசி பிரிவினைச் சார்ந்தவர்கள் முதல் வகுப்பில் (பர்ஸ்ட் கிளாஸ்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும்.

வயது வரம்பு - பொதுப்பட்டியலைச் சார்ந்தவர்களுக்கு - அதிகப்பட்ச வயது வரம்பு 25 (01.02.1992 அன்று அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்) ஓபிசி பிரிவினருக்கு - அதிகப்பட்ச வயது வரம்பு 28 (01.02.1989 அன்று அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்) எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு - அதிகப்பட்ச வயது வரம்பு 30 (01.02.1987 அன்று அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்) மாற்றுத் திறனாளிகளுக்கு - எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்களோ அந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள வயது வரம்பிலிருந்து ஐந்து வருடம் கூடுதல் சலுகை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எக்ஸ் சர்வீஸ் மேன் - கவர்மென்ட் கைடுலைன்ஸ் படி வயது தளர்வு அளிக்கப்படுகிறது.

எலக்ட்ரானிக்ஸ் - 11 காலியிடங்கள்:
எலக்ட்ரானிக்ஸ் எஞ்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் எஞ்ஜினியரிங்
கம்யூனிகேஷன் எஞ்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் & டெலி கம்யூனிகேஷன் எஞ்ஜினியரிங்
டெலிகாம் எஞ்ஜினியரிங்

மெக்கானிக்கல் - 2 காலியிடங்கள்:
மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங்

கம்ப்யூட்டர் சயின்ஸ் - காலியிடம் 1:
கம்ப்யூட்டர் சயின்ஸ் & எஞ்ஜினியரிங் கம்ப்யூட்டர் எஞ்ஜினியரிங்

மேற்கண்ட காலியிடங்கள் அனைத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் எழுத்துத் தேர்வில் அதிக மார்க் எடுப்பவர்களே நேர்முகத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் ஆப்ளை செய்யவும். முக்கியத் தேதிகள் எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 8 மார்ச் 2017 எழுத்துத் தேர்விற்கான நுழைவுச் சீட்டு - 18 மார்ச் 2017ல் இருந்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு - 26 மார்ச் 2017 எழுத்துத் தேர்விற்கான ரிசல்ட் மற்றும் நேர்முகத் தேர்விற்கான நுழைவுச் சீட்டு - 05 ஏப்ரல் 2017 அன்று வெளியிடப்படும்.

நேர்முகத் தேர்வு - 18 மற்றும் 19 ஏப்ரல் 2017 அன்று நடைபெறும் என பெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

வலைதளம்: www.bel-india.com

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)