முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 9, 2017

மீனவர் உடலை வாங்க மறுத்து தொடரும் போராட்டத்தில் SDPI கட்சியும் இணைந்தது!!

No comments :
மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வந்த தாக்குதல்களின் உச்சகட்டமாக, கடந்த 6–ந் தேதி இரவு ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை, ராமேசுவரம் தீவு மற்றும் தமிழக கடலோர மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்கு நியாயம் கேட்டும், மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க மத்திய அரசை வற்புறுத்தியும், ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் குழந்தை ஏசு ஆலயம் முன்பு மீனவக்குடும்பத்தினர் நேற்றுமுன்தினம் அறவழிப்போராட்டம் தொடங்கினார்கள். இந்தப்போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது.


முதல் நாளை விட 2–வது நாளான நேற்று அதிக அளவில் பெண்களும், மீனவர்களும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளைஞர்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அங்கேயே சமையல் செய்து உணவு வழங்கப்பட்டது.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேரில் வந்து இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று உறுதி அளிப்பதுடன், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர் நேற்று வந்து ஆதரவு தெரிவித்துப்பேசியதுடன், மீனவர் பிரிட்ஜோ குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் கூறினர்.

உண்ணாவிரத போராட்டத்தில் SDPI கட்சி கிழக்கு மாவட்ட செயலாலர் சகோ. செய்யது இப்ராஹிம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். உடன் மாவட்ட நிர்வாகிகள்.SDPI செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.




இதற்கிடையே, மீனவர் பிரிட்ஜோவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து தொடர்ந்து ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளது.

தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை உடலை பெறப்போவதில்லை என்று மீனவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)