முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 26, 2017

பாம்பன் அருகே ரூ.60 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம்!!

No comments :
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொல்லையில்லாமல் தொழில் செய்ய தமிழக அரசு மாற்றுத்தொழிலாக ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வழி வகுத்துள்ளது.

இதற்காக ராமேசுவரம், மூக்கையூர், தூத்துக்குடி ஆகிய ஊர்களில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்றவாறு துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த துறைமுகங்கள் அமைய உள்ள இடங்களை பார்வையிடுவதற்காக நேற்று தமிழக மீன்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மீன்துறை கூடுதல் இயக்குனர் மோகனசுந்தரம் மற்றும் அதிகாரிகள் ராமேசுவரம் வந்தனர். 

பின்பு அவர்கள் மீனவர் சங்க தலைவர்கள் போஸ், தேவதாஸ், சேசு, எமரிட், சகாயம் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் பாம்பனை அடுத்துள்ள குந்துகால் கடற்கரை பகுதிக்கு சென்று துறைமுகம் அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்டனர்.

அப்போது தமிழக மீன்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:

மீனவர்கள் மாற்றுத்தொழிலில் ஈடுபடுவதற்கு முதல் கட்டமாக ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தமிழகம் முழுவதும் 170 மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன்உதவி வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.60 கோடி செலவில் குந்துகாலில் துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதேபோல தூத்துக்குடி, மூக்கையூர் ஆகிய பகுதிகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அரசு அனுமதி வழங்கியவுடன் அதற்கான பணிகள் தொடங்கும்.


இவ்வாறு அவர் கூறினார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)