முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 4, 2017

உள்ளாட்சி தேர்தலை வரும் நவம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க ஹைகோர்ட் உத்தரவு!!

No comments :
தமிழக உள்ளாட்சி தேர்தலை வரும் நவம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 நகர பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.

இதுதொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனினும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் காலதாமதமாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தது.


இந்நிலையில் திமுக தொடர்ந்த அந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உள்ளாட்சி தேர்தலை நவம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுக்கும் அதற்கான அறிவிக்கையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிடப்பட்டது.

மேலும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை மேற்கொள்ள இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் மண் ஆய்வகம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை, பெரியபட்டினம், பூலாங்குடி, சடையன்வலசை மற்றும் கழுகூரணி சுற்றியுள்ள கிராம விவசாயிகளுக்காக நடமாடும் மண் ஆய்வகம் செயல்படவுள்ளது.

இது மாவட்ட கலெக்டர்  வளாகத்தில் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் செயல்படும்.


விவசாயிகள் தங்கள் மண்ணை பரிசோதனை செய்து, பரிந்துரையின் படி உரங்களை இட்டு பயன் பெறலாம் என, பரமக்குடி நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராஜன் தெரிவித்தார். 


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

அழிந்து வரும் தென்னை விவசாயம்!!!

No comments :
கீழக்கரை, ஏர்வாடி, காஞ்சிரங்குடி, மாயாகுளம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. நூற்றுக்கணக்கானோர் இப்பகுதியில் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான தேங்காய்கள் இப்பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து ஏற்படும் பல்வேறு சிரமங்களால் பெரும்பாலானோர் தென்னை விவசாயத்தை விட்டு விட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் தற்போது தென்னையை வளர்த்தாலும் கண்ணீர்தான் என்கிறார்கள் இப்பகுதி தென்னை விவசாயிகள். 

காஞ்சிரங்குடியில் தனியார் சார்பில் கயிறு திரிக்கும் தொழிற்சாலை, தேங்காய் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தது. காலபோக்கில் அதுவும் மூடப்பட்டது. ஆனால் மிகப்பெரிய அளவில் தென்னை மரங்களை உடைய இப்பகுதியில் இன்று வரை அரசு சார்பில் தென்னை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை இல்லை என்பது ஆச்சரியமே.

தேங்காய் பவுடர், தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதேபோல் தென்னை நாறுகளை கயிறுகளாக திரித்தும், அழகிய வீட்டு உபயோக விரிப்புகளாகவும், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்றவற்றை இப்பகுதியில் அமைப்பதற்கு அரசு முன்வர வேண்டும். 

இதன் மூலம் இப்பகுதியில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் தென்னை மரங்களை அழித்து தென்னந்தோப்புகளை வீட்டு மனைகளாக விற்கும் அவல நிலையும் குறையும். தென்னை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கேரளாவில் பல்வேறு வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அரசு அவர்களுக்கு அனைத்துவிதமான சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஏற்றுமதிக்கான சந்தைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

மேலும் தென்னைக் கழிவுகளில், பல வகையான பொருட்களை உற்பத்தி செய்து உலக சந்தைக்கு எடுத்து செல்கிறது. இதனால் அங்கு தென்னை விவசாயம் பெருகுகிறது. 

இப்பகுதியில் உள்ள விவசாயத்துறை அதிகாரிகள் இவ்விசயத்தில் கவனம் செலுத்தி தென்னை விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். தொடர்ந்து நஷ்டத்தை விவசாயிகள் சந்திப்பார்களேயானால் அவர்கள் அத்தொழிலில் இருந்து விலகி தற்போது மிஞ்சியிருக்கும் தென்னந்தோப்புகளும் அழிந்து போகும் சூழ்நிலை ஏற்படும்.

இப்பகுதி விவசாயத்துறை விழித்து கொள்ள வேண்டும்.
இதற்காக மக்கள் பிரதிநிதிகள் அரசை வலியுறுத்த வேண்டும்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)