முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 14, 2017

பாம்பன் பாலத்தின் தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதல்; “100–வது விபத்து” என கேக் வெட்டி இளைஞர்கள் அதிருப்தி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் கடற்கரை பகுதியை, ராமேசுவரம் தீவுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரோடு பாலம். இந்த பாலம் அமைக்கப்பட்டு 29 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலை வழுவழுப்பாகவும், வெயிலில் உருகும் தன்மையுடனும் இருந்தது. இதனால் கடந்த 3 மாதங்களில் மட்டும் 15–க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பலர் விழுந்து படுகாயமடைந்துள்ளனர். தினமும் இந்த பாலத்தில் தொடர்ந்து சிறுசிறு விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் மதுரையில் இருந்து நேற்று ராமேசுவரம் நோக்கி வந்த அரசு பஸ் பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.



பஸ்சின் முகப்பு பகுதி மட்டும் சேதமடைந்தது. இந்த பஸ்சை ஆண்டிப்பட்டியை சேர்ந்த பாஸ்கரன்(வயது 58) என்பவர் ஓட்டி வந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாம்பன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் போக்குவரத்து கழக அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதனிடையே அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இது பாம்பன் பாலத்தில் நடந்துள்ள 100–வது விபத்து என்று கூறி கேக் வெட்டி அப்பகுதி மக்களுக்கு வழங்கி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுநர்களிடம் பாம்பன் பாலத்தில் போடப்பட்டுள்ள சாலையின் தன்மை குறித்தும், மெதுவாக செல்லும்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பாம்பன் பாலத்தில் வழுவழுப்பான சாலையை அகற்றி விட்டு தரமான சாலை அமைக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காகவே இதுபோன்று கேக் வெட்டி வலியுறுத்தியதாக அந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பாம்பன் பாலத்தில் வழுவழுப்பான சாலையை அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் தரமான சாலை அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

செய்தி: தினத்தந்தி
  



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)