முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 21, 2017

இரண்டாக பிரிகிறதா ராமநாதபுரம் மாவட்டம்..?!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதி மாவட்டத்தை உருவாக்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் அதிகமாக உள்ள பெரிய மாவட்டங்களை நிர்வாக ரீதியான சிறப்பான செயல்பாடுகளுக்காக பிரிப்பது வழக்கம்.

அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருவாடானை, பரமக்குடி, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி ஆகிய வருவாய் வட்டங்களை உள்ளடக்கியது. சுமார் 7 வட்டங்களை உள்ளடக்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றுவர வேண்டும் என்றாலே பல கிராம மக்கள் ஒரு நாளை செலவிட வேண்டியுள்ளது.



இதனால், சிறப்பான நிர்வாகத்தை வழங்கும்பொருட்டு ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் உள்ளன.

இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர், உதவி ஆட்சியர் ஆகியோருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருச்சுழி மற்றும் புதிதாக தோற்றுவிக்கக் கோரியுள்ள பார்த்திபனூர் ஆகிய வட்டங்களை இணைத்து கமுதி மாவட்டம் உருவாக்கக்கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக முதலமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதால், புதிய மாவட்டம் பிரிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.


இதையடுத்து வரும் 25-ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கமுதி மாவட்டம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நவ.,28 முதல் நடக்கிறது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பயிற்சி வகுப்பு நடக்கிறது.



இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், பெயர் மற்றும் முகவரியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவ.,25க்குள் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த அனைவரும், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நவ.,28 முதல் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.


மேலும் விபரங்களுக்கு 99449 32477 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற மாரத்தான்போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்!!

No comments :
ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற மாரத்தான்போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் டாக்டர் மணிகண்டன் புகைப்படக்கண்காட்சியை திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் நகரம் புதிய பேருந்து நிலையம் அருகே, பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் போட்டியினையும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக மூன்று நாட்கள் நடைபெறும் பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர்
  நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியினையும் தொடங்கி வைத்தார். 
 
தமிழ்நாடு அரசின் சாhர்பில், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 30.06.2017 அன்று மதுரை மாவட்டத்தில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து இவ்விழா நடைபெற்று வருகின்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 25.11.2017 அன்று பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதற்காக ராமநாதபுரம் டி-பிளாக்கில் உள்ள அம்மா பூங்கா மைதானத்தில் கடந்த 03.11.2017 அன்று பந்தல் கால் நடும் விழா நடைபெற்றது. தொடர்ந்து, பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். வரலாற்று சிறப்புகள் குறித்து பள்ளி, கல்லூரிகளிடையே பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போடம்டி ஆகிய போட்டிகளும், விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.   

இந்நிலையில் ராமநாதபுரம் நகரம் புதிய பேருந்து நிலையம் அருகே தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன்
  மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இம்மாரத்தான் போட்டியானது சிறுவர், சிறுமியர் என இரு பாலருக்கும் தனித்தனியே நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு 25.11.2017 அன்று நடைபெறவுள்ள பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரிசுகளை வழங்குவார்கள்.

மாரத்தான் போட்டியினை தொடர்ந்து, ராமநாதபுரம் நகரம் புதிய பேருந்து நிலையம் அருகே செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியினைதகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியானது வரும் 21.11.2017 வரையிலான மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இக்கண்காட்சியில் பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் சிறப்புகளை விளக்கிடும் வகையிலான பல அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. பொது மக்கள் ஏராளமானோர் இக்கண்காட்சியினை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ராம்கோ தலைவர் மாவட்ட அவைத்தலைவர் செ.முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க்பால் ஜெயசீலன், ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை,  ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி முதல்வர் குருசாமி  ஆகியோர் உட்பட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கும் கீழக்கரை கடற்கரைப் பூங்கா, அச்சப்படும் மக்கள்!!

No comments :
கீழக்கரை கடற்கரை பூங்கா, மீன் பிடி துறைமுகம் பகுதியில் இரவு நேரங்களில் இருளில் இருப்பதால், கடற்கரைப்பகுதியில் நடமாட முடியாமல் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

இப்பகுதியில் மீன் பிடி துறைமுகமும், அதனையொட்டிய பகுதிகளில் கடற்கரைப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மாலை நேரங்களில் நடை பயிற்சி, உடற்பயிற்சியும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடற்கரைப்பகுதியில் மக்கள் அமருவதற்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்தியுள்ளனர். இப்பகுதியில் மின் விளக்குள் அமைக்கப்பட்டுள்ளன. மின் விளக்குகள் எரியாததால், கடற்கரைப் பூங்காவிற்கு வருகைதரும் பெண்கள் அச்சத்தில் இருள் வருவதற்குள் கடற்கரைப்பகுதியை விட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. அதே போல் கடலில் மீன் பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இருளில் கடற்கரைப்பகுதியில் சமூக விரோத செயல்களில் இளைஞர்கள் ஒரு சிலர் ஈடுபடுவதால், அமைதியாக கடற்காற்று

வாங்க வருகை தருபவர்கள் எரிச்சலடைகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து கடற்கரைப் பூங்காவை பொதுமக்கள் இரவு நேரங்களில் பயன் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)