(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 13, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு பகலாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை?!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை,அழகுன்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. ஊர் மக்களுக்கே போதிய நீர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சில தனியார் நிறுவனங்கள் எங்கள் பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகளில் இரவு பகலாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் எங்கள் பகுதி நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக எங்கள் பகுதியில் தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

இதேபோல, அழகன்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடலால் சூழப்பட்ட எங்கள் பகுதியில் மேலோட்டமாக உள்ள நன்னீரையே நம்பி உள்ளோம்.

எங்கள் பகுதியில் கிடைக்கும் நல்ல தண்ணீர் எங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ள நிலையில் குடிநீர் வாரியத்தால் சில கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய கிணறு தோண்டி குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதனால் எங்களின் நீர் ஆதாரம் குறைந்து தண்ணீருக்கு அவதிப்படும் நிலை உருவாகி வந்தது.

இதன் காரணமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இனிவரும் காலங்களில் இந்த பகுதியில் இருந்து வேறு கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டங்களை நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவு பெறப்பட்டுஉள்ளது. இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சிலர் தங்கள் பகுதிகளில் கிணறுகளை அமைத்து இரவு பகலாக வணிக ரீதியாக தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.

ஐகோர்ட்டு உத்தரவினை மதிக்காமல் செயல்படுவதால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. எனவே, உடனடியாக அழகன்குளம் பகுதியில் வணிக ரீதியில் தண்ணீர் எடுத்து செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த பணியாளர்கள் 16 பேர் தங்களுக்கு வரவேண்டிய வருங்கால வைப்புநிதியை தராமல் இழுத்தடித்து வருவதாகவும், உடனடியாக அந்த நிதியை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment