(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 25, 2018

புதிதாக அமைக்கப்பட்ட மைல் கற்களில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு; மற்றுமொரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டமா?!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் உள்ள மைல் கற்களில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளது. 

மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு ராமநாதபுரம் வழியாக குறுக்குச் சாலையில் செல்லும் வகையில், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இச்சாலையானது, ராமநாதபுரம் நகருக்குள் செல்லாமல், அருகேயுள்ள அச்சுந்தன்வயல் கிராமத்திலிருந்து தொடங்கி பட்டணம்காத்தான் வரை சுற்றுச்சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. 

வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள், கனரக வாகனங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சாலை வழியாக சென்று வருகின்றன. 

இந்நிலையில், இந்த சுற்றுச்சாலைப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மைல் கற்கள் பலவற்றில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிட்ட ஊர்களுக்கான கி.மீ. தொலைவு எழுதப்பட்டுள்ளது. இம் மைல் கற்களில் ஹிந்தியிலும் அந்தந்த ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இவற்றை சிலர் கருப்பு மை கொண்டு அழித்துள்ளனர். குறிப்பாக, ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானிலிருந்து சத்திரக்குடி வரையிலான சுற்றுச்சாலைப் பகுதியான சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள மைல் கற்களில் மதுரை, பரமக்குடி, ராமேசுவரம் என ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. 

மேலும், அம் மைல்கற்களின் மீது தமிழ் மண் எனவும் எழுதியுள்ளனர். இதனால், வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் குழப்பமடைய வாய்ப்புள்ளது. எனவே, இச்செயலில் ஈடுபடுவர்களை கண்காணித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment