(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 8, 2018

வெயில் காலங்களில் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் - கலெக்டர்!!

No comments :
வெயில் காலங்களில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2018-ஆம் ஆண்டின் கோடைகாலம் வழக்கமான வெப்பநிலையை விட கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  பொதுமக்களுக்கு வெயில் தொடர்பான அபாயங்கள் குறித்து உடன் அணுகிட இராமநாதபுரம் மாவட்ட பேரிடர் அவரச செயலாக்க பிரிவில் இலவச தொலைபேசி எண்: 1077 எந்த நேரத்திலும் செயல்பட்டு வருகிறது. அதனை பயன்படுத்திட பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 


மேலும் பொதுமக்கள் கோடைக்காலத்தில் தாகம் இல்லாவிடினும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும்.  லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழுக்கை ஆடைகள் அணிதல் வேண்டும். வீட்டின் ஜன்னல், கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல்; நேரங்களில் அவற்றை முடிய நிலையலும், இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டினை குளுமையாக இருக்கும் வகையில் பராமரித்துக் கொள்ள வேண்டும். மின்விசிறி பயன்படுத்தியும் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை  குறைத்திட செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது . 

வெளியில் செல்லும்போது தவறாது குடை அல்லது தொப்பி, காலணி அணிந்து செல்ல வேண்டும். இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி, சாத நீர், எலுமிச்சை சாறு, மோர், ஓ.ஆர்.எஸ் எனப்படும் உப்பு சர்க்கரைக்கரைசல், உப்பு கலந்த கஞ்சி, பழரசங்கள் போன்றவற்றை பருகவும். வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் தவறாது குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டிவைத்து, அவற்றிற்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் தீவணம் அளிக்க வேண்டும்.

இதுதவிர நண்பகல் 12.00 மணி முதல் 3.00 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மது, தேனீர், காப்பி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.அதிக புரதம், மாமிச கொழுப்புச் சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கடும்வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளை கடைப்பிடித்து கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment