(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 10, 2018

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், கழிவு குப்பைக்கு தீ வைப்பதால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல்!!

No comments :
ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், கழிவு குப்பைக்கு தொடர்ந்து தினமும் தீ வைப்பதால் நோயாளிகள் மூச்சு திணறலில் பாதிக்கப்படுகின்றனர்.

ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகளாக 500 க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். பிணவறைக்கு பின் புறம் சேரும் குப்பையை நகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தி வந்தனர்.

சமீப காலமாக இந்த குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் வருவதில்லை. இதன் காரணமாக தினசரி மருந்து கழிவு, பயன்படுத்தப்பட்ட ஊசிகளை பிணவறை பின் புறம் சுகாதார பணியாளர்கள் கொட்டுகின்றனர்.



இந்த குப்பை தீவைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கு அருகிலேயே காச நோய் பிரிவு வார்டு, மகப்பேறு சிகிச்சை வார்டு, குழந்தைகள் நலப்பிரிவு வார்டுகள் உள்ளன. இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள், குப்பை எரிக்கப்படுவதால் வரும் புகையை சுவாசிக்கின்றனர். காச நோயாளிகள் இருமலால் கடும் அவதிப்பட்டு, மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர்.

திறந்த வெளியில் குப்பை எரிக்கப்படுவதால், அப்பகுதியில் நடமாடும் மக்கள் கண் எரிச்சலுக்கு ஆளாகின்றனர். குப்பைக்கு தீ வைப்பதால் வரும் புகையை அங்குள்ள டாக்டர்கள், அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாக நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மருத்துவமனை வளாகத்திற்குள் குப்பைக்கு தீவைப்பதை நிறுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகம் மூலம் பாதுகாப்பாக குப்பைகளை அகற்றம் செய்ய முன் வர வேண்டும்.

செய்தி; தினமலர்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment