(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 11, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசணை கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசணை கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகளின் அடிப்படையில் அரசுக்கு இறுதி பிரேரணை சமர்ப்பிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது:-

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை, வாக்குச்சாவடி கட்டிடங்களின் உறுதித்தன்மை, அமைவிடங்கள், பொதுமக்களின் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி மேற்கொண்டு இறுதி வாக்குச்சாவடி பட்டியல் தயாரித்திட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 1307 வாக்குச்சாவடிகளில், ஊரகப் பகுதிகளில் 1200 மற்றும் நகர்ப் பகுதிகளில் 1400 வாக்காளர்களை விட அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள், பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 60 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, இவ்வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிப்பதற்கும்,  அதேபோல  பொதுமக்களின் கோரிக்கை, வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், ஒரே இடத்தில் அமைந்துள்ள 24 வாக்குச்சாவடிகளில், வாக்குச் சாவடிகளுக்கிடையில் பிரிவுகளை மாற்றம் செய்வதற்கும், தற்போதுள்ள வாக்குச்சாவடி கட்டிடங்களின் உறுதித்தன்மை மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 24 வாக்குச் சாவடி மையங்களின் கட்டிடம் மற்றும் அமைவிடங்களை மாற்றியமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 02.07.2018 அன்று வரைவு மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.



அவ்வரைவு பட்டியலின் மீது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 09.07.2018 வரை கருத்துக்கள் கோரப்பட்டது.
 
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கும் பணியினை இறுதி செய்து அரசுக்கு முடிவான பிரேரணை அனுப்புவதற்காக இக்கூட்டத்தின் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள 1307 வாக்குச்சாவடிகளில் 1200 மற்றும் 1400 வாக்காளர்களைவிட அதிகமாக உள்ள 60 வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரிப்பதற்கும், பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் ஒரே இடத்தில் உள்ள 26 வாக்குச்சாவடிகளுக்கிடையில் பிரிவுகளை மாற்றம்  செய்வதற்கும், வாக்குச்சாவடி கட்டிடங்களின் உறுதித்தன்மை மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 26 வாக்குச்சாவடி மையங்களின் கட்டிடம் மற்றும் அமைவிடங்களை மாற்றியமைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உரிய பிரேரணைகள் அனுப்பி வைக்கப்பட்டு ஆணைகள் பெறப்படும். இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில் பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தேர்தல் வட்டாட்சியர் கல்யாணகுமார், உள்பட அனைத்து வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


செய்தி; தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment