முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 7, 2018

அம்மா ஸ்கூட்டி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!!

No comments :
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அம்மா ஸ்கூட்டி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 10-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று வரை 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். அரசின் இந்த அறிவிப்புக்கு பெண்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மானியம் உயர்வு....
பெண்கள் சமுதாயத்தை முன்னேற்ற சிறப்பான திட்டமாக பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தார். ஒரு ஸ்கூட்டர் வாங்க 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகனதிட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மானிய தொகையை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும் அறிவித்தார்.

பணிபுரியும் பெண்...
கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள், அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், வறுமை ஒழிப்பு சங்கத்தில் பணிபுரியும் பெண்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சலுகையாக இளம் விதவைகள், மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த மகளிர், திருநங்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதிகபட்சமாக 50 சதவீதம் வாகனத்தின் விலை அல்லது ரூபாய் 25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். பயன் பெறும் பயனாளிகள் தங்களது விருப்பப்பட்ட வாகனங்களை வாங்கி கொள்ளலாம். மேலும் பயனாளிகள் தமிழகத்தை பூர்வீகமாக வசிப்பவராகவும் 18 வயது முதல் 40 வயது கொண்டவராகவும் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் மிகாமல் இருத்தல் அவசியம். பெண்கள் ஓட்டுநர் அல்லது பழகுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

பெண்கள் ஆர்வம்....
அம்மா இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் இலவசமாக கடந்த மாதம் 22-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. இதற்காக மண்டல அலுவலகங்களில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. விண்ணப்பங்களை ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அதனை பூர்த்தி செய்து அங்கேயே கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் கட்டாயம் என்பதால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பெண்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று விண்ணப்பங்களை சமர்ப்பித்து உரிமங்களை பெற்று வந்தனர். பெண்கள் கூட்டம் அலைமோதியதாலும், அலுவலகம் செல்லும் பெண்களின் வசதிக்காகவும் விடுமுறை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டன. அவர்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன.

நீட்டிக்க கோரிக்கை
இந்த நிலையில் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 5-ம் தேதி மாலையுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று முன்தினம் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பெண்கள் அதிக அளவில் குவிந்தனர். மாலை 5 மணிக்கு பிறகும் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.


காலக்கெடு நீட்டிப்பு
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மானிய விலையிலான ஸ்கூட்டர் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை 10-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் மீதான ஆய்வுப்பணி உடனடியாக துவங்குகிறது. தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் பணி 15-ம் தேதி நடக்கிறது.ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற 24-ம் தேதி அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆர்.கே.நகர் தொகுதியில் தொடங்கி வைக்கிறார்.

23 ஆயிரம் பேர்...
மானிய விலை ஸ்கூட்டருக்கு சென்னையில் 23 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். போட்டிபோட்டு கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்த பெண்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது. பாதுகாப்புக்காக மண்டல அலுவலகங்களில் போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெறுவதற்காக பெண்கள் திரண்டதால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் இதேநிலை தான் இருந்தது. ஒரே நாளில் 17 ஆயிரம் பேர்கடந்த 2-ம் தேதி வரை சென்னையில் 6,187 பெண்கள் ஸ்கூட்டர் பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்திருந்தனர். நேற்று மட்டும் 16,773 பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். சென்னையில் இதுவரை மொத்தம் 22,960 பெண்கள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

தனுஷ்கோடி பகுதியில் பறவை வேட்டை; அகப்படுவோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் மற்றும் சிறை தண்டனை!!

No comments :
ராமேசுவரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ளது கோதண்டராமர் கோவில் கடல் பகுதி. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் ஆஸ்திரேலியாவில் இருந்து பிளமிங்கோ என்ற வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வருவது வழக்கம். ஆனால் இந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கியும் இதுவரை பிளமிங்கோ பறவைகள் வரவில்லை.

ஆனால் கோதண்டராமர் கோவில் கடல் பகுதி மற்றும் அரிச்சல்முனைகம்பிப்பாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் கடல் காவா என்று அழைக்கப்படும் கடல் புறாக்கள் குவிந்துள்ளன. இதை தவிர உள்ளான் குருவிசெந்நாரைவெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பல பறவைகளும் அதிக அளவில் வந்துள்ளன. இந்தநிலையில் கடல் காவா உள்ளிட்ட பறவைகளை மர்ம நபர்கள் சிலர் வேட்டையாடி வருவதாக தகவல் கிடைத்தது.




இதையொட்டி பறவைகளை வேட்டையாடுவதை தடுக்கும் வகையில் மண்டபம் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் கோதண்டராமர் கோவில் கடற்கரை முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரை கடற்கரை பகுதியில் பறவைகளை வேட்டையாட கன்னி வலைகள் ஏதும் புதைத்து வைக்கப் பட்டுள்ளனவா என்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனச்சரகர் கூறியதாவது:- பறவைகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். தனுஷ்கோடி பகுதியில் சுற்றித் திரியும் பறவைளை சிலர் வேட்டையாடுவதாக தகவல் வந்துள்ளது. பறவைகளை வேட்டையாடினால் ரூ.25ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும். பறவைகளை வேட்டையாடும் நபர்களை கண்டால் வனத்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளோம்.

கடந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் பிளமிங்கோ பறவைகள் இது வரை வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)