முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 6, 2018

காவல் ஆய்வாளருக்கு ஓராண்டு சிறை, தவறுதலாக ஒருவரை தாக்கிய வழ்க்கில்!!

No comments :
திருட்டு வழக்கு ஒன்றில் தவறுதலாக ஒருவரை தாக்கியது தொடர்பான வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த கண்ணன் என்பவருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

நயினார்கோவில் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் காளிதாஸ் மகன் கா.கண்ணன் (53). இவர் நயினார்கோவில் அருகே மேமங்கலம் கிராமத்தில் ஜெயராணி என்பவரது வீட்டில் நகை திருடு போனது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரை காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்து தாக்கியதில் அவர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.



இது குறித்து கணேசன் பரமக்குடி கோட்டாட்சியர், மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆகியனவற்றிலும் புகார் செய்தார். மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவின்படி பரமக்குடி டி.எஸ்.பி.ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜெயராணியின் காணாமல் போன நகையை யாரோ அவரது வீட்டில் போட்டு விட்டனர். பரமக்குடி டி.எஸ்.பி.ஆறுமுகசாமியின் விசாரணையில் கணேசன் தவறு செய்யவில்லை என்றும், அவரைத் தாக்கி துன்புறுத்தியதும் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆய்வாளர் கா.கணேசன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் எனவும் பரிந்துரைத்தார்.

இதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக நயினார்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்று மாறும் கணேசன் கேட்டுக் கொண்டதையடுத்து வழக்கு ராமநாதபுரம் 2 ஆவது குற்றவியல் நீதிமன்றத்துக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த இவ்வழக்கின் விசாரணை திங்கள்கிழமை முடிவுக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கினை விசாரித்த 2 ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பொறுப்பு) ஜி.இசக்கியப்பன் கணேசனை திருட்டு வழக்கில் தவறுதலாக தாக்கியதால் அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். கண்ணன் தற்போது தருமபுரி மாவட்டம் களத்தாவூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரம் கோயில் அருகே மதுபாட்டில்கள் பறிமுதல், ஒருவர் கைது!!

No comments :
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே சங்கு கடையில் மறைத்து வைத்து விற்கப்பட்ட150 மதுபாட்டில்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ராமேசுவரம் வருகையையொட்டி, கோயிலை சுற்றுவட்டாரப் பகுதியில் காவல்துறையினர், உளவுத்துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


அப்போது, கிழக்கு கோபுரம் அருகே உள்ள சங்கு கடைக்கு அதிகளவில் இளைஞர்கள் சென்றதை போலீஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து அருகில் சென்று பார்த்தபோது, அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அங்கிருந்த 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் அன்புராஜை கைது செய்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)