முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 13, 2018

ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை!!

No comments :
ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தொழில் நுட்ப பணியாளர்கள் இன்றி தவித்து வருகின்றனர். நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் அவசர சிகிச்சை பிரிவு , எலும்பு முறிவு பிரிவு, இதய நோய் பிரிவு, குழந்தைகள் பிரிவு, பிரசவம், அறுவை சிகிச்சைப்பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, பிசியோதெரபி பிரிவு, பல் மருத்துவ பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, அனைத்து வகையான சிறப்பு பிரிவுகள் இயங்கி வருகிறது. 70 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.

நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் மருந்து, மாத்திரை வழங்கும் இடத்தில் போதுமான பணியாளர்கள் இல்லாததால், நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.



இங்குள்ள பார்மசிஸ்ட்கள், மாற்றுப்பணியாக திருவாடானை, ராமேஸ்வரத்திற்கும் அனுப்பப்படுகின்றனர்.

பிரேத பரிசோதனை பணிக்காக ஒருவர் சென்றுவிடுகிறார். இதில் தினசரி 2 முதல் 3 பார்மசிஸ்ட்கள் மட்டுமே பணியில் உள்ளனர். பரிசோதனை கூடத்தில் போதுமான பணியாளர்கள் இல்லாததால், பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

இந்த முடிவுகளுக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வாகனங்களை முறைப்படுத்தாமல், கண்ட இடங்களில்
நிறுத்துவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அவரசர சிகிச்சைக்கு செல்லும் வாகனங்கள் திரும்ப கூட முடியாமல் தவிக்கின்றனர்.

இது போன்ற பிரச்னைகளால் நோயாளிகள் தவித்து வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முறைப்படுத்த வேண்டும்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு பகலாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை?!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை,அழகுன்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. ஊர் மக்களுக்கே போதிய நீர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சில தனியார் நிறுவனங்கள் எங்கள் பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகளில் இரவு பகலாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் எங்கள் பகுதி நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக எங்கள் பகுதியில் தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

இதேபோல, அழகன்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடலால் சூழப்பட்ட எங்கள் பகுதியில் மேலோட்டமாக உள்ள நன்னீரையே நம்பி உள்ளோம்.

எங்கள் பகுதியில் கிடைக்கும் நல்ல தண்ணீர் எங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ள நிலையில் குடிநீர் வாரியத்தால் சில கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய கிணறு தோண்டி குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதனால் எங்களின் நீர் ஆதாரம் குறைந்து தண்ணீருக்கு அவதிப்படும் நிலை உருவாகி வந்தது.

இதன் காரணமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இனிவரும் காலங்களில் இந்த பகுதியில் இருந்து வேறு கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டங்களை நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவு பெறப்பட்டுஉள்ளது. இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சிலர் தங்கள் பகுதிகளில் கிணறுகளை அமைத்து இரவு பகலாக வணிக ரீதியாக தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.

ஐகோர்ட்டு உத்தரவினை மதிக்காமல் செயல்படுவதால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. எனவே, உடனடியாக அழகன்குளம் பகுதியில் வணிக ரீதியில் தண்ணீர் எடுத்து செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த பணியாளர்கள் 16 பேர் தங்களுக்கு வரவேண்டிய வருங்கால வைப்புநிதியை தராமல் இழுத்தடித்து வருவதாகவும், உடனடியாக அந்த நிதியை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)