முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 8, 2018

வெயில் காலங்களில் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் - கலெக்டர்!!

No comments :
வெயில் காலங்களில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2018-ஆம் ஆண்டின் கோடைகாலம் வழக்கமான வெப்பநிலையை விட கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  பொதுமக்களுக்கு வெயில் தொடர்பான அபாயங்கள் குறித்து உடன் அணுகிட இராமநாதபுரம் மாவட்ட பேரிடர் அவரச செயலாக்க பிரிவில் இலவச தொலைபேசி எண்: 1077 எந்த நேரத்திலும் செயல்பட்டு வருகிறது. அதனை பயன்படுத்திட பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 


மேலும் பொதுமக்கள் கோடைக்காலத்தில் தாகம் இல்லாவிடினும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும்.  லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழுக்கை ஆடைகள் அணிதல் வேண்டும். வீட்டின் ஜன்னல், கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல்; நேரங்களில் அவற்றை முடிய நிலையலும், இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டினை குளுமையாக இருக்கும் வகையில் பராமரித்துக் கொள்ள வேண்டும். மின்விசிறி பயன்படுத்தியும் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை  குறைத்திட செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது . 

வெளியில் செல்லும்போது தவறாது குடை அல்லது தொப்பி, காலணி அணிந்து செல்ல வேண்டும். இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி, சாத நீர், எலுமிச்சை சாறு, மோர், ஓ.ஆர்.எஸ் எனப்படும் உப்பு சர்க்கரைக்கரைசல், உப்பு கலந்த கஞ்சி, பழரசங்கள் போன்றவற்றை பருகவும். வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் தவறாது குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டிவைத்து, அவற்றிற்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் தீவணம் அளிக்க வேண்டும்.

இதுதவிர நண்பகல் 12.00 மணி முதல் 3.00 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மது, தேனீர், காப்பி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.அதிக புரதம், மாமிச கொழுப்புச் சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கடும்வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளை கடைப்பிடித்து கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் விஷன் 2022 திட்டத்தின்கீழ் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் விஷன் 2022 திட்டத்தின்கீழ் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
 
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விஷன் 2022 திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

இந்திய அரசு அறிவித்துள்ளபடி, 2022ல், முன்னேற்றமடைந்த புதிய இந்தியாவை நாம் காண வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்திய நாட்டில் உள்ள வளர்ந்து வரும் மாவட்டங்களைக் கண்டறிந்து, அவற்றின் சமூக பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் 115 மாவட்டங்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

அவற்றில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்கள்;  தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விஷன் 2022 திட்டத்தின் கீழ் வேளாண்மை மேம்பாடு, பொது சுகாதார முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, அடிப்படை உட்கட்;டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்திறன் பயிற்சி வழங்கி தனிநபர் வருமானத்தை உயர்த்துதல் என்பதனை அடிப்படையாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் மாவட்டத்தில் 2018-2019 ஆம் நிதியாண்டில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கும்,  பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த இளைஞர்களுக்கும் அவரவர் ஆர்வத்திற்கேற்ப உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளில் பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

இந்த  குறுகிய கால பயிற்சியில் கலந்து கொள்ள  விருப்பமுள்ள தனியார் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று பயிற்சி வழங்குவதற்கு, தங்களது பயிற்சி நிறுவனம் குறித்த விபரங்கள் அனைத்தையும்   இணைத்து மாவட்ட தொழில்மை மைய பொது மேலாளர் மற்றும் இராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்களிடம் 10.04.2018க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும்  இத்தகைய தொழிற்பயிற்சியில் இளைஞர்களை ஆர்வமுடன் பங்கேற்றிட செய்வதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மதுரை மண்டல பயிற்சி இணை இயக்குநர்கள் (வேலைவாய்ப்பு) பா.அனுசியாசெல்வி,  எஸ்.ரவிச்சந்திரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) எம்.பேச்சியம்மாள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் க.கிருஷ்ணவேணி, பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் என்.சுஜிபிரமிளா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சியாமளாநாதன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)