முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 28, 2018

தடை உத்தரவை மீறி நிலத்தடி நீரை உறிஞ்சும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு ஹைகோர்ட் உத்தரவு!!

No comments :
மண்டபம் யூனியன் அழகன்குளம் கிராமத்தில் நிலத்தடி நீர் நல்ல தண்ணீராக இருப்பதால் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் ஆழ்குழாய்கள் அமைத்து சுற்று வட்டார பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததை தொடர்ந்து தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இங்கிருந்து லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் எடுத்துச்செல்ல தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.




மேலும் அழகன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து நிலத்தடி நீரை எடுக்க கிராம மக்கள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தடை உத்தரவு பெற்றுள்ளனர். இருப்பினும் தனியார் சிலர் தங்களது இடங்களில் கிணறுகள் அமைத்து தண்ணீரை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு தினமும் நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் எடுத்துச்செல்லப்படுகிறது.

இதையடுத்து இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை இந்து,முஸ்லிம் ஐக்கிய சபை நிர்வாகிகள் நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். அதன் பின்னரும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதால் இதுகுறித்து இந்து சமூக செயலாளர் முத்துரெத்தினம், ஜமாத் தலைவர் அகமது ஆகியோர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அதனை தொடர்ந்து அழகன்குளத்தில் நிலத்தடி நீரை எடுக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை மீறி தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதேபோல வட்டார வளர்ச்சி அலுவலர், நிலத்தடி நீரை எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)