முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 10, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் 113 இடங்களில் உப்பு நீரை நன்னீராக்கும் நிலையங்கள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 113 இடங்களில் உப்பு நீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மாற்றுத் திறனாளிகள் 75 பேருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் உட்பட 557 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியது: பொதுமக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய 355 புதிய குடிநீர் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 113 இடங்களில் உப்புநீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ளதாக தொடர்ந்து புகார் வரும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேலு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பி.ஜெகஜோதி உட்பட அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


செய்தி; தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், கழிவு குப்பைக்கு தீ வைப்பதால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல்!!

No comments :
ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், கழிவு குப்பைக்கு தொடர்ந்து தினமும் தீ வைப்பதால் நோயாளிகள் மூச்சு திணறலில் பாதிக்கப்படுகின்றனர்.

ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகளாக 500 க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். பிணவறைக்கு பின் புறம் சேரும் குப்பையை நகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தி வந்தனர்.

சமீப காலமாக இந்த குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் வருவதில்லை. இதன் காரணமாக தினசரி மருந்து கழிவு, பயன்படுத்தப்பட்ட ஊசிகளை பிணவறை பின் புறம் சுகாதார பணியாளர்கள் கொட்டுகின்றனர்.



இந்த குப்பை தீவைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கு அருகிலேயே காச நோய் பிரிவு வார்டு, மகப்பேறு சிகிச்சை வார்டு, குழந்தைகள் நலப்பிரிவு வார்டுகள் உள்ளன. இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள், குப்பை எரிக்கப்படுவதால் வரும் புகையை சுவாசிக்கின்றனர். காச நோயாளிகள் இருமலால் கடும் அவதிப்பட்டு, மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர்.

திறந்த வெளியில் குப்பை எரிக்கப்படுவதால், அப்பகுதியில் நடமாடும் மக்கள் கண் எரிச்சலுக்கு ஆளாகின்றனர். குப்பைக்கு தீ வைப்பதால் வரும் புகையை அங்குள்ள டாக்டர்கள், அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாக நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மருத்துவமனை வளாகத்திற்குள் குப்பைக்கு தீவைப்பதை நிறுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகம் மூலம் பாதுகாப்பாக குப்பைகளை அகற்றம் செய்ய முன் வர வேண்டும்.

செய்தி; தினமலர்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)