முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 12, 2018

ராமநாதபுரம் அருகே ஓ.என்.ஜி.சி குழாய் வெடித்து எரிவாயு கசிவு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட தெற்குக்காட்டூர் கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம்கெயில் நிறுவனம்அரசுதனியார் மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் எரிவாயு இருக்கும் பகுதியை கண்டறிந்து பூமிக்கடியில் குழாய்கள் பதித்து அதன் மூலம் தெற்குக்காட்டூரில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட எரிவாயு அங்கேயே சுத்திகரிக்கப்பட்ட பின்னர் அருகில் உள்ள கெயில் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து அரசுதனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.




இந்தநிலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் தெற்குக்காட்டூரை சேர்ந்த சேதுராமன் மனைவி ஆறுமுகம், கண்ணன் ஆகியோர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது மண்எண்ணெய் வாசனையுடன் எரிவாயு வெளியேறுவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கிராம தலைவர் சிவசாமி, மண்டபம் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் தனபாலன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு ஓ.என்.ஜி.சி. அலுவலர்களுக்கு தெரியப்படுத்தியதும், அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் பம்புகள் அடைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். ஆனால் இரவு 7 மணிக்கு மேலும் குழாயில் இருந்து எரிவாயு கசிந்து கொண்டே இருந்தது.

இந்த எரிவாயு குழாய் திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, புதுமடம், ரெகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தெற்குக்காட்டூரில் விவசாய நிலங்கள் வழியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு வருகிறது. அவர்கள் எரிவாயு கசிவை உடனடியாக நிறுத்தாமல், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனராம். 

அதைதொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று இரவு 7 மணி வரை எரிவாயு கசிவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராததால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்படி கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் ராமநாதபுரம் துணை தாசில்தார் சரவணன், வாலாந்தரவை கிராம நிர்வாக அலுவலர் மகேஷ்வரன் ஆகியோர் விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.



செய்தி; தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.225 கோடி மதிப்பில் கடனுதவி வழங்க இலக்கு – கலெக்டர்!!

No comments :


ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கடல் உவர் ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த உறுப்பினர்கள் தொழில் தொடங்கிட கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த சமுதாய வள அமைப்பாளர்களுடனான ஆலோசனை கருத்தரங்கம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:–

தமிழ்நாடு அரசு மகளிர் நலனை பாதுகாத்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஊரகப்பகுதிகளில் உள்ள மகளிர் சுயமாக தொழில் செய்து சமுதாயத்தில் நம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு நடப்பு நிதியாண்டில் இணைப்பு கடனுதவி திட்டங்களின் வாயிலாக மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.225 கோடி மதிப்பில் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.



மாவட்டத்தில் தற்போது மொத்தம் 6 ஆயிரத்து 892 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ 86 ஆயிரம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இத்தகைய மகளிர் சுயஉதவிக்குழுவினர் சிறிய அளவில் மீன்பிடி சார்ந்த தொழில், காய்கறி தோட்டம், தையல்கடை அமைத்தல், பனையோலை சார்ந்த வீட்டு உபயோகப்பொருள் தயாரித்தல் போன்ற பல்வேறு சிறுதொழில் செய்து வருமானம் ஈட்டுகின்றனர். எனவே வங்கியாளர்கள் தகுதியான பயனாளிகளுக்கு, அரசு அறிவித்த திட்டம் 100 சதவீதம் முழுமையாக சென்று சேர்ந்திடும் வகையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கரன், மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் மதியழகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் குணசேகரன், மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் பிரான்சிஸ், ராமநாதபுரம் பாண்டியன் கிராம வங்கி மேலாளர் குசலவன் உள்பட அரசு அலுவலர்கள், வங்கிகளை சார்ந்த பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு சமுதாய வளஅமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி; தினத்தந்தி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)